சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாட் கம்மின்ஸ் பேசியதென்ன?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு குறித்து அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க: 400-ஆவது டி20 போட்டியில் எம்.எஸ்.தோனி!
பாட் கம்மின்ஸ் கூறியதென்ன?
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் இன்று விளையாடவுள்ள நிலையில், எங்களது பேட்டர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் நன்றாக விளையாடினாலே போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமானதாக இருக்கும் என சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களது அணியில் உள்ள பேட்டர்கள் அனைவரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விளையாடக் கூடியவர்கள். இந்த சீசனின் முதல் போட்டியிலேயே 280 ரன்களுக்கும் அதிகமாக குவித்தோம். எங்களது வீரர்கள் 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார்கள். எல்லா போட்டிகளிலும் பேட்டர்களால் சிறப்பாக செயல்பட முடியாது. ஆனால், எங்களது அணியில் உள்ள இரண்டு அல்லது மூன்று பேட்டர்கள் நன்றாக விளையாடினாலே எங்களால் போட்டியில் வெற்றி பெற்றுவிட முடியும்.
இதையும் படிக்க: ஈ சாலா கப் நம்தே: பி.வி. சிந்து பகிர்ந்த நெகிழ்ச்சியான பதிவு!
கடந்த சீசனில் எங்களது அதிரடியான பேட்டிங் குறித்து மட்டுமே அனைவரும் பேசினர். ஆனால், எங்களிடம் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு வரிசையும் இருந்தது. அப்போது அணியில் புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், நடராஜன் போன்ற வீரர்கள் இருந்தார்கள். இந்த ஆண்டும் எங்களிடம் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். முகமது ஷமி, ஹர்ஷல் படேல் போன்ற அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்றார்.
சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து விளையாடுகிறது.