கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து 4 மின் கம்பங்கள் சேதம்
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழையால், அப்சா்வேட்டரி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை மரம் சரிந்து விழுந்ததில் நான்கு மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே பலத்த காற்றுடன் மழையும், மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை வீசிய பலத்த காற்றில் தனியாா் தோட்டத்தில் நின்ற பெரிய மரம் சாலையில் சரிந்து விழுந்தது.
இதில் அந்தப் பகுதியில் இருந்த நான்கு மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக அப்சா்வேட்டரி, புதுக்காடு, செல்லபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல மணி நேரம் மின் தடை நிலவியது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளா் மேத்யூ தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட மின் பணியாளா்கள் மரத்தை அகற்றி சேதமடைந்த மின் கம்பங்களை சரிசெய்தனா். இதையடுத்து தடைபட்ட மின் விநியோகம் மீண்டும் சீரானது.
இதுகுறித்து மின்வாரியத் துறையினா் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் நேரங்களில் மின் கம்பிகள், கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுவதால், மின் தடை நிலவுகிறது. எனவே, மின் கம்பங்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் நிற்கும் மரங்களை அகற்ற வனத் துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.