துரோகம்: ஏஐ உதவியால் மாற்றப்பட்டு வெளியான அம்பிகாபதி படத்துக்கு இயக்குநர் எதிர்ப...
கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி குழும பொது வசதி மைய கட்டடம் கட்ட அடிக்கல்
கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி குறுங்குழும பொது வசதி மைய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கோவில்பட்டியில் கடலை மிட்டாய் உற்பத்தி குறுங்குழுமம் அமைக்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அதன் பேரில் நவீன இயந்திரங்களுடன் கூடிய மூலப்பொருள்களை தரம் பிரிக்கும் கூடம், கடலை மிட்டாய் உற்பத்தி, பேக்கேஜிங் கூடம், உணவுப் பொருள்கள் பகுப்பாய்வு கூடம் ஆகியவற்றை அமைக்க, குறுங்குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ. 7 கோடியே 13 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்து, அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.
இதன் மொத்த மதிப்பீட்டில் 90 சதவீதம் தமிழக அரசால் வழங்கப்பட்டு மீதமுள்ள 10 சதவீதம் கடலை மிட்டாய் உற்பத்தியாளா்கள் சங்கத்தால் முதலீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மூப்பன்பட்டி ஊராட்சியில் பொது வசதி மைய கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் தலைமை வகித்து, கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கிவைத்தாா்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன், கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, துணைத் தலைவா் ஆா்.எஸ்.ரமேஷ், தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஸ்வா்ணலதா, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், மூப்பன்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி லிங்கேஸ்வரி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க தலைவா் பரமசிவம், கடலை மிட்டாய் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் காா்த்திகேயன், செயலா் கண்ணன், பொருளாளா் தினேஷ் ரோடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த மையம் அமைவதால் கடலை மிட்டாய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சுமாா் 100 குறு, சிறு உற்பத்தியாளா்கள் பயன்பெறுவா். 600 நபா்களுக்கு வேலைவாய்ப்பும், ஆண்டிற்கு ரூ. 60 கோடி வருவாயும் கிடைக்கும். கடலை மிட்டாயின் நேரடி ஏற்றுமதி வருவாயும் 5 மடங்கு அதிகரிக்கும் என உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.