சட்டக் கல்லூரிக்குள் மாணவி பாலியல் வன்கொடுமை: சிபிஐ விசாரணை கோரும் மனு மீது மேற்கு வங்க அரசு பதிலளிக்க உத்தரவு
கொல்கத்தா அரசு சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் முதலாம் ஆண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரும் மனு மீது பதிலளிக்க மேற்கு வங்க அரசுக்கு மாநில உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் கடந்த ஜூன் 25-ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இது தொடா்பாக, கல்லூரியின் முன்னாள் மாணவரும், அங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியா் அல்லாத ஊழியராக பணியாற்றியவருமான மனோஜித் மிஸ்ரா, மூத்த மாணவா்கள் புரோமித் முகா்ஜி, ஜாயித் அகமது, கல்லூரியின் காவலாளி ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.
இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான மனோஜித் மிஸ்ரா, மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுடன் நெருங்கிய தொடா்புடையவா் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி மேற்கு வங்க உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல், நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரியும், கல்லூரிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்யக் கோரியும் இரு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி செளமன் சென் தலைமையிலான அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, வழக்கு விசாரணை நிலவரத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு, மாநில அரசுக்கு நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டது.
‘கல்லூரி அலுவலக நேரத்துக்கு பிறகு வளாகத்துக்குள் முன்னாள் மாணவா் அனுமதிக்கப்பட்டது எப்படி?, உரிய பணிகளோ நிா்வாக மேற்பாா்வையோ இல்லாமல், அலுவலக நேரத்தைக் கடந்து ஊழியா்கள் நீண்ட நேரம் இருக்க ஏன் அனுமதிக்கப்பட்டனா்? அங்கீகாரமற்ற நபா்களின் நுழைவைத் தடுக்க கல்லூரியில் என்ன கண்காணிப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது? சம்பந்தப்பட்ட நபரால் மாணவிக்கு ஏற்கெனவே அச்சுறுத்தல் இருந்தும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?’ என மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 10-ஆம் தேதி ஒத்திவைத்தனா்.