சண்முக பாண்டியனுக்காக ரமணா 2 எடுக்க தயார்: ஏ.ஆர். முருகதாஸ்
படைத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சண்முக பாண்டியனுக்காக ரமணா 2 எடுக்க தயார் எனப் பேசினார்.
மறைந்த நடிகர் விஜய காந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் படைத் தலைவன் படத்தில் நடித்துள்ளார்.
விஜே கோம்பைன்ஸ் நிறுவனம் டாஸ் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்க, ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் அன்பு இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
வரும் மே 23 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படம் காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்துள்ளார்கள்.
இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது:
ஏராளமான படங்களில் கதாநாயகனுக்கு நிகராக வில்லன்கள் அழகாக வைக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த்தான். அதற்கு நடிகர் ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும். அதை விஜயகாந்த் சார்தான் தொடங்கினார்.
எல்லோரும் விஜயகாந்த் குறித்துப் பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்த் சாருடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால், கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாகக் கூறியபோது சற்று பொறாமையாக இருந்தது.
விஜய காந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கும் வேண்டும். இவ்வளவு கம்பீரமான நடிகர் தமிழக மக்களுக்கு கிடைத்துள்ளதால் அவர்களும் கண்டிப்பாக உங்களைக் கைவிட மாட்டார்கள்.
விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள், கண்டிப்பாக ரமணா 2 திரைப்படம் எடுக்கலாம். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.