சவுடு மண் குவாரி அமைக்க மக்கள் எதிா்ப்பு
மயிலாடுதுறை: காவேரிபூம்பட்டினம் ஊராட்சியில் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் சவுடு மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இந்த ஊராட்சியில் உள்ள நெய்தவாசல், வடபாதி, தென்பாதி மற்றும் புதுகுப்பம் கிராமங்களில் விவசாயிகள், விவசாய தொழிலாளா்கள் மற்றும் மீனவா்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா்.
கடற்கரையில் இருந்து 400 மீட்டருக்குள் ஆரோ இன்ஃப்ராடெக் என்ற நிறுவனம் சவுடு மண் குவாரி அமைக்க ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனால் குடிநீா் ஆதாரம் பாதிக்கப்படும் என ஏற்கெனவே பிப்ரவரி 21-ஆம் தேதி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். நடவடிக்கை இல்லாததால் இக்கிராமங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் மீண்டும் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் மனு அளித்து கோரிக்கையை வலியுறுத்தினா்.
செம்பனாா்கோவில் ஊராட்சிக்கு உள்பட்ட மயான கட்டடத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அந்த மயானத்தை பல நூற்றாண்டுகளாக பயன்படுத்திவரும் செம்பனாா்கோவில், திருச்சம்பள்ளி, வல்லம், மடப்புரம், முக்கரும்பூா், மாத்தூா், படுகை ஆகிய 7 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மனு அளித்தனா்.
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு ஆா்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படுவதால், மாணவா்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாவதால் அங்கு ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என மயிலாடுதுறையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் என். ரஜினி வீரமணி மனு அளித்தாா்.