டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
சாதிவாரி கணக்கெடுப்பு: "ஒன்றிய அரசு நடத்தினாலும் மாநில அரசும் நடத்த வேண்டும்" - விஜய் வலியுறுத்தல்
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-க்கு பிறகு நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், அது குறித்து இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், எதிர்க்கட்சிகளின் முக்கிய வலியுறுத்தலான சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து நேற்று வெளியான அரசிதழில், "மக்கள்தொகை கணக்கெடுப்பு 2 கட்டமாக நடத்தப்படும்.
முதல் கட்டமாக 2026 அக்டோபர் 1-ம் தேதி லடாக், காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளிலும், 2-ம் கட்டமாக 2027 மார்ச் 1ம் தேதி முதல் நாட்டின் பிற பகுதிகளிலும் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், மக்களவைத் தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது என்றும், தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் விஜய், "சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம்.
இந்தக் கோரிக்கையானது, இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்த காரணத்தால் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கி வந்து, நாடு முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது.
இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் ஒன்றிய அரசு, மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, வெறும் கண்துடைப்பு சாதிவாரித் தலைக்கட்டுக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது; அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கப் பெறும் வகையில் நடத்த வேண்டும்.
இதற்கென்று அனைத்துச் சமூகத்தின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய ஒரு பிரத்தியேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும்.
உரிய தரவுகள் முறையாகவும் முழுமையாகவும் இருக்கும் வகையில் குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
அதன் அடிப்படையில் எங்கள் பிரதான கோரிக்கையான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
— TVK Vijay (@TVKVijayHQ) June 17, 2025
குறிப்பாக, மக்களவைத் தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது.
மாறாக அனைத்துச் சமூகத்திற்கும் உரிய விகிதாசார அடிப்படையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும்.
இதுவே முழு அளவிலான சமூக நீதி ஆகும். இந்தக் கணக்கெடுப்பின் வாயிலாக உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு (Caste Census) நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை (Caste Survey) நடத்த வேண்டும்.
அண்டை மாநில அரசுகள் சில தங்களுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தியுள்ளன. இந்த ஆய்வு மீண்டும் நடத்தப்படும் என்று சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இந்தப் புதிய சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வில் (Caste Survey), மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலை உள்ளிட்டவைக் குறித்தத் தரவுகள் முழுமையாகச் சேகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.
இதுதான் உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என்றும் அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள அரசு செய்ய வேண்டியது இதைத்தான்.
எனவே, தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு (Caste Survey) நடத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் வகுப்புகளின் சமூக, வாழ்வாதார, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும், எந்தெந்த நிலைகளில் தற்போது பின்தங்கி உள்ளனர் என்பதற்கான சரியான தரவுகள் மற்றும் தற்போதைய சமூக நிலை உள்ளிட்டவற்றின் விவரங்களை அதில் சேகரிக்க வேண்டும்.
அந்த ஆய்வானது, அனைத்துச் சமூகத்திற்குமான பிரதிநிதித்துவத்தையும் சட்டப்படி செல்லத்தக்க, உகந்த உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலான தரவுகளை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இதைச் செய்யாமல், மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற ஒன்றிய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் தி.மு.க அரசு, பா.ஜ.க.வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது.

அவ்வாறு ஒளிந்துகொண்டு மாநில அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் விட்டுவிட்டால், தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுக்கான கோரிக்கை இன்னும் வலுவடையும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
அத்துடன் எங்கள் கொள்கைத் தலைவர் பெரியார் அவர்களின் கொள்கை முழக்கமான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை, கபட நாடகத் தி.மு.க அரசு, பிளவுவாத பா.ஜ.க அரசுடன் இணைந்து அமல்படுத்தத் தவறினால், இந்த மக்கள் விரோத அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.