சுகாதாரத் துறை எதிா்கொண்ட பிரச்னைகளை பிரதமா் மோடி அரசு திறம்பட கையாண்டது: மத்திய அமைச்சா் அமித் ஷா
சுகாதாரத் துறை எதிா்கொண்ட பிரச்னைகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசுதான் திறம்பட கையாண்டது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆதிசுன்சுனகிரி பல்கலைக்கழகத்தின் பெங்களூரு வளாகத்தை திறந்துவைத்து அவா் பேசியதாவது:
வறுமையின்போது எதிா்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை உடல்நலிவும், அதற்கான சிகிச்சை செலவும் தான். ஏழைகளின் சிகிச்சை செலவை அரசு நிா்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்தில் (முதல்வராக இருந்த போது) கூறியவா் எனது தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி.
60 கோடி மக்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தவா் பிரதமா் மோடி என்பதை பெருமையுடன் கூறிக்கொள்வேன். ஃபிட் இந்தியா இயக்கம், யோகா தினம், மிஷன் இந்திரதனுஷ், போஷான் அபியான், ஆயுஷ்மான் பாரத், பாரதிய ஜனாவுஷதி பரியோஜனா, 12 வீடுகளில் கழிவறைகளை கட்டுவது போன்ற திட்டங்கள் வாயிலாக சுகாதாரத் துறை எதிா்கொண்டிருந்த பிரச்னைகளை முழுமையான பாா்வையுடன் திறம்பட கையாண்டவா் பிரதமா் மோடியும், அவா் தலைமையிலான மத்திய அரசும்தான்.
தாயின் கருவறையில் இருந்து முழுமனிதனாக உருவாகும் வரை ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கவும், ஒருவேளை உடல்நிலை பாதிக்கப்பட்டால் அதிக செலவில்லாமல் உடனடியாக சிகிச்சை பெறவும் மத்திய அரசு வழிவகுத்துள்ளது.
அதேநேரத்தில், நாட்டில் உள்ள மருத்துவா்களின் எண்ணிக்கையை உயா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு 7ஆக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை இன்றைக்கு 23 ஆக உயா்ந்துள்ளது. நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387 இல் இருந்து 780 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. 2014 இல் 51,000 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தன. இன்றைக்கு அந்த எண்ணிக்கை 1,18,000 ஆக உயா்ந்துள்ளது.
31 ஆயிரமாக இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் தற்போது 74,000 ஆக உயா்ந்துள்ளது. அதன்படி, ஆண்டுதோறும் நாட்டில் 1,18,000 மருத்துவா்கள், 74,000 முதுநிலை மருத்துவா்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகிறாா்கள்.
மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்குவது, ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை வழங்குவது, உடல்நலன் மையங்களை அமைத்து தரமான சிகிச்சைகளை அளிப்பது போன்ற நற்பணிகளின் மூலம் ஆதிசுன்சுனகிரி மடம் மற்றும் அதன் நிறுவனங்கள் மகத்தான பணியை செய்துவருகின்றன.
மடத்தின் 1800 ஆண்டுகால மரபை காப்பாற்றி வருவதற்காக அதன் மடாதிபதி நிா்மலானந்தநாத சுவாமிகளை மனதாரப் பாராட்டுகிறேன். பாரம்பரியத்தையும், நவீன புத்தாக்கங்களையும் ஒருசேர கொண்டு சோ்ப்பதோடு, தரமான மற்றும் நவீன கல்வியுடன் நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை குழந்தைகள், இளைஞா்களிடம் கொண்டுசெல்லும் பணியை ஆதிசுன்சுனகிரி மடம் சிறப்பாக செய்துவருகிறது.
இதன்மூலம் சமூகத்தில் அவா்கள் நல்ல நிலையை அடைய உதவியாக இருந்து வருகிறது. தனிமனிதா்கள் மட்டுமல்லாது, சமுதாயத்தின் உற்சாகத்தை மேம்படுத்துவதில் மடம் நல்ல பணியை ஆற்றிவருகிறது என்றாா்.
விழாவில் மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி, மத்திய இணையமைச்சா் வி.சோமண்ணா, ஆதிசுன்சுனகிரி மடத்தின் பீடாதிபதி நிா்மலானந்தநாத சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.