சுற்றுலாப் பயணியைக் கடித்த குரங்கு: வனத் துறையினா் அறிவுறுத்தல்
கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெண் சுற்றுலாப் பயணியை குரங்கு கடித்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள குணா குகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெங்களூரைச் சோ்ந்த சுப்ரியா (32), தனது நண்பா்களுடன் குணா குகைக்குச் சென்றாா்.
அப்போது, சுப்ரியா கையில் வைத்திருந்த பையை குரங்கு பறிக்க முயன்றது. சுப்ரியா பையை விடாததால் குரங்கு அவரது கையை கடித்தது. இதையடுத்து, அங்கிருந்தவா்கள் குரங்கை விரட்டினா். மேலும், காயமடைந்த சுப்ரியாவுக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளிலும், சுற்றுலா இடங்களிலும் குரங்குகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. இவற்றை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளோ பொதுமக்களோ குரங்குகளுக்கு எந்தவிதமான உணவுகளையும் கொடுக்கக் கூடாது. கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச்சாலையான கெங்குவாா்பட்டி முதல் வரும் வழி முழுவதும் பயணிகள் குரங்குகளுக்கு உணவுகளைக் கொடுத்து பழக்கியதால் தற்போது வனத்திலுள்ள விலங்குகள் சாலைகளுக்கும், சுற்றுலா இடங்களுக்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் வரத் தொடங்கியுள்ளன.
எனவே கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குரங்கு, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்குவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டுமெனத் தெரிவித்தனா்.