சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணப்பட்ட இந்திய குள்ளநரி - வனவிலங்கு நிபுணர்கள் சொல்வதென்ன?
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இந்திய குள்ளநரியைக் கண்டுள்ளனர். இந்த இனத்தை சதுப்பு நிலத்தில் முதன் முதலில் பார்த்ததாகவும் தெரிவிக்கின்றனர். சென்னை மாவட்ட வன அதிகாரி வி.ஏ சரவணன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து வனவிலங்கு நிபுணர்கள் கூறுகையில்
" இதற்கு முன்பு சென்னையில் உள்ள தியோசாபிகல் சொசைட்டிக்குப் பின்னால் உள்ள தீவுகள், ப்ளூ கிராஸ் சாலை, பெசன்ட் நகர், கிண்டி தேசிய பூங்கா மற்றும் நன்மங்கலம் ரிசர்வ் காடு உள்ளிட்ட இடங்களில் நரிகளைப் பார்த்துள்ளனர். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இப்போது இந்த அரிய உயிரினங்களின் வாழ்விடமாக பட்டியலில் இணைகிறது.
நகர விரிவாக்கத்தின் காரணமாக பசுமையான இடங்கள் குறைந்து வருகின்றன. இந்த சமயத்தில் நரியைக் கண்டது நல்ல விஷயம். சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தையும் உயிரினங்களின் தொடர்பையும் இது எடுத்துரைக்கிறது" என்கின்றனர்.

சதுப்பு நிலத்தின் விலங்கினங்களை கண்காணித்து வரும் பாதுகாவலர் கே.வி.ஆர்.கே திருநாரணன் கூறுகையில்,
"நரியைக் கண்டது, பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு நேர்மறையான அறிகுறி. இங்கு நரிகள் காணப்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணி, ஏராளமான உணவுகள் இங்கு இருப்பதுதான்.
சதுப்பு நிலத்தில் மீன்கள், நண்டுகள் என ஏராளமான இரைகள் உள்ளன. குறிப்பாக, நரிகள் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை விரும்பி உண்ணும்.
நரிகள் அவற்றை உண்ணும்போது மீனின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவும். இது சுற்றுச்சூழல் சமநிலைக்கு வழிவகுக்கும்" என்றார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவின் உயிரியலாளர் G காமராஜ் கூறுகையில் ”நரிகள் இதற்கு முன்பு வயல்வெளிகளில் காணப்பட்டன. அவை எலிகளை சாப்பிட்டு விவசாயிகளுக்கு உதவியாக இருந்தன.
எலிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகித்தன. இது விவசாயிகளுக்கு பயிர் சேதத்தை குறைக்கவும் உதவியாக இருந்தது” என்று அவர் கூறினார்.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நரி காணப்பட்டது பறவை ஆர்வலர்கள் மத்தியில் ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.