10-ஆம் வகுப்பு தோ்வு: ஒரே மதிப்பெண்கள் எடுத்த இரட்டையா்கள்!
`செல்லூர் ராஜூ போட்டியிட்டால் தோற்கடிப்போம்' - முன்னாள் ராணுவ வீரர்கள் கொந்தளிப்பு... ஏன்?
முன்னாள் ராணுவத்தினர் லீக் தலைவர் கர்னல் சி.டி.அரசு பேசும்போது, "பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கான தகவல் கிடைத்த உடனே, நமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவின்படி சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதே பாகிஸ்தான் மன்னிப்பு கேட்டிருக்கலாம்.
பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது நம் நோக்கம் அல்ல. தீவிரவாத கூட்டத்தை ஒழிப்பதுதான் நோக்கம். அணுகுண்டு இருப்பதாக பாகிஸ்தான் பல தடவை சொன்னார்கள். அனைத்து நாடுகளும் இந்தியா எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்றார்கள்
இந்த தாக்குதல்கள் நிறுத்தப்படுவது பாகிஸ்தான் கையிலதான் உள்ளது. அவர்கள் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தினால் நம் தாக்குதல் தொடரும்.

வடக்கே ஜம்மு காஷ்மீரிலிருந்து ஆரம்பித்து மேற்கே குஜராத் வரையிலும் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கை, கடற்படை, தரைப்படை, வான் படை வழியாக தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். இதுபோல போர் நடக்கும் காலகட்டத்தில் இந்தியாவில் இருக்கிற அனைத்து முன்னாள் படை வீரர்கள் அமைப்புகளும் ராணுவத்துக்கு உதவிகள் செய்வோம்.
வன்மையாக கண்டிக்கக்கூடியது!
தமிழ்நாட்டில் பத்தாண்டுகள் அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இவர், `படை வீரர்கள் சண்டை போட்டார்களா?’ என பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கக்கூடியது. அவரின் கருத்தை கேட்டு அகில இந்திய அளவில் உள்ள இந்நாள், முன்னாள் படை வீரர்களும் மனவேதனையில் உள்ளோம், செல்லூர் ராஜூ அவருடைய கருத்தை திரும்பப் பெற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால அவருடைய கட்சித் தலைமையிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்,

மீண்டும் அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் முன்னாள் படை வீரர்கள் அவரை தோற்கடிப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுப்போம். தன்னுடைய கருத்து தவறாக பரப்பப்பட்டுள்ளது என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். யூ டியூப் மற்றும் முகநூலில் அவர் பேசிய ஆதாரம் உள்ளது. அதை மறுக்க முடியாது, இப்போ மாற்றிப் பேசுகிறார்.
ஏற்கனவே தமிழக அமைச்சரவையில் முன்னாள் முப்படை வீரர்கள் நலத்துறைக்கும், பல கமிட்டிகளுக்கு தலைவராகவும் இருந்தவர் இப்படி பேசியது வருத்தமளிக்கிறது. வருங்காலத்தில் பொதுத் தேர்தலில் அவர் போட்டியிட்டால் அவருக்கு எதிராக முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் அவர்களை குடும்பத்தை சார்ந்தவர்கள் எதிர்த்து வேலை செய்வோம்.
மக்கள் பிரதிநிதியாக உள்ள செல்லூர் ராஜூ தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்துள்ளோம். செல்லூர் ராஜூ, ராணுவ வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
இந்த நிலையில், "ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை, செய்தி திரிக்கப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்தபோது முன்னாள் படை வீரர்களுக்கான துறையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும், செல்லூர் ராஜூக்கு எதிராக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் முன்னாள் படைவீரர்கள் போராட்டஙகளை நடத்தி வருகிறார்கள்.