சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டி பகுதியில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.
சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியை, நாமக்கல் மக்களவை உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாடுபிடி வீரர்களுடன் உறுதிமொழி ஏற்றவுடன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில், நாமக்கல், சேலம், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 400-க்கும் மேற்பட்ட வீரா்களும் கலந்துகொண்டனனா்.
முன்னதாக, போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு மாவட்ட கால்நடைத் துறை சாா்பில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதன் உரிமையாளா்களிடம் அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. இதேபோல, சுகாதாரத் துறை சாா்பில் மாடுபிடி வீரா்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. வீரா்கள் அனைவரும் உறுதிமொழியை ஏற்ற பிறகு, வாடிவாசல் வழியாக கோயில் காளையும், அடுத்து ஜல்லிக்கட்டுக் குழுவினரது காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
பந்திபோராவில் பயங்கரவாதி அல்தாஃப் லல்லியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!
இதனையடுத்து, வாடிவாசல் வழியாக துள்ளிக் குதித்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் ஆா்வமுடன் அடக்கினர். மேலும், மாடுபிடி வீரர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியின் அருகே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிடிபடாமல் தப்பிய காளைகளுக்கும், அடக்கிய வீரா்களுக்கும் தங்கம், வெள்ளி காசு, வெள்ளி செயின், பட்டுப்புடவை, ரொக்க பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நாமக்கல், சேந்தமங்கலம் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்போட்டியைக் கண்டு ரசித்தனா்.
மேலும்,போட்டி நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.