ஜம்மு - காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் இருக்கக் கூடாது: அம்பேத்கரை மேற்கோள் காட்டிய தலைமை நீதிபதி
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்திய தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் வரவேற்றுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மத்திய அரசு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ அதிரடியாக ரத்து செய்தது. அதன்பின், ஜம்மு - காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும் லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டன.
இந்தநிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு நடவடிக்கையாகப் பார்க்கப்படும் ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி தலைமை நீதிபதி கவாய் இப்போது பேசியிருக்கிறார்.
மகாராஷ்டிரத்தின் நாக்பூர் நகரில் இன்று(ஜூன் 28) நடைபெற்றதொரு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், “அரசியல் சாசன சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, என்னை உள்ளடக்கிய நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, அந்த விசாரணையில் நான் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சொல்லியிருப்பதை மேற்கோள் காட்டியிருந்தேன்.
‘ஒரு நாட்டுக்கு ஒரு அரசியல் சாசனம் இருப்பதே பொருத்தமாக இருக்கும்... நாம் நமது நாட்டை ஒற்றுமையாக இருக்கச் செய்ய விரும்பினால், ஒரேயொரு அரசமைப்பு சாசனம் மட்டுமே நமக்கு தேவை’ என்பதே அம்பேத்கர் சொன்னவை.
பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்... இப்படி நம் அண்டை நாடுகளில் நிலவும் சூழலை ஒப்பிட்டுப் பார்த்தால், நம் நாட்டில் சவால்கள் பல வந்தபோதெல்லாம் இந்தியா ஒற்றுமையாகவே விளங்கியது. அதற்கு உறுதுணையாக அரசியல் சாசனம் இருந்தது குறிப்பிடத்தக்கது” என்றார்.