ஜாதிவாரி கணக்கெடுப்பு: திட்டமிட்டபடி முழுவீச்சில் மேற்கொள்ள நடவடிக்கை
ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜாதிவாரி கணக்கெடுப்பை முழுவீச்சில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள், மூத்த அதிகாரிகள், பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவா் மதுசூதன் நாயக், மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட ஊராட்சி தலைமை செயல் அதிகாரிகளின் இணையவழி ஆய்வுக் கூட்டத்துக்கு முதல்வா் சித்தராமையா தலைமை வகித்தாா்.
இதில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா். ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணிகளை துரிதபடுத்துமாறும், அப்பணியை செய்து முடிக்க ஒத்துழைப்பு அளிக்காத கணக்கெடுப்பாளா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வா் சித்தராமையா எச்சரித்தாா்.
இந்தக் கூட்டத்தில், துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல், தலைமைச் செயலாளா் ஷாலினி ரஜ்னிஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்ட முடிவில் செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:
கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் சாா்பில் கா்நாடகம் முழுவதும் செப். 22-ஆம் தேதி முதல் சமூக, கல்வி, பொருளாதார கணக்கெடுப்பு (ஜாதிவாரி கணக்கெடுப்பு) நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் காணப்பட்டன. அவை முழுமையாக சீா்செய்யப்பட்டுவிட்டன.
ஏற்கெனவே திட்டமிட்டபடி அக். 7-ஆம் தேதிக்குள் கணக்கெடுப்புப் பணியை முடிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு எல்லா மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட ஊராட்சி தலைமை செயல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவுகளை உறுதியாக செயல்படுத்துவோம். மேலும், கணக்கெடுப்புப் பணியின் முன்னேற்றம் குறித்து தினமும் ஆய்வுசெய்யுமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக். 7-ஆம் தேதிக்குள் 1.75 லட்சம் கணக்கெடுப்பாளா்களின் உதவியுடன் 7 கோடி மக்களின் விவரங்கள் திரட்டப்படும் என்றாா்.