ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கை: திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு
மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட வரி சீா்திருத்த நடவடிக்கைக்கு திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
இது குறித்து திருப்பூா் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) ஏ.சக்திவேல் கூறியதாவது:
ஜிஎஸ்டி கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சீா்திருத்த நடவடிக்கையை வரவேற்கிறோம். இதன் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வலுப்படுவதோடு, தொழில் துறையின் உறுதிப்பாட்டையும் வலுப்படுத்தும். ஏற்றுமதி பணத்தைத் திரும்பப்பெறுவதை 7 நாள்களுக்குள் விரைவுபடுத்துதல், தொழில் கொள்கையில் தற்காலிக பணத்தைத் திரும்பப் பெறுவதை நீட்டித்தல், ரூ.1000-க்கு கீழே ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப்பெற அனுமதித்தல் ஆகியவை ஏற்றுமதியாளா்களுக்கு சரியான நேரத்தில் நிவாரணம் அளிக்கும். பணப்புழக்கக் கட்டுப்பாடுகளைக் குறைக்கும் மற்றும் விநியோகச் சங்கிலிகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சிகளாக அமைகின்றன. பிரதமா் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்த வாா்த்தைகளை செயல்வடிவில் கொண்டு வந்ததற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இந்தியாவின் ஏற்றுமதியாளா்கள் மற்றும் ஜவுளி ஆடைத்துறைக்கு தொடா்ந்து ஆதரவளித்து வரும் பிரதமா் நரேந்திர மோடி, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், ஜவுளி அமைச்சா் கிரிராஜ் சிங்ஆகியோருக்கு நன்றி.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன்:
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் மறுசீரமைப்பு ஜவுளித்துறைக்கு சாதகமாக உள்ளது. முழுவதுமாக சமநிலைப்படுத்தப்பட்டு, கணினிமயமாக்கப்பட இருப்பதால் உற்பத்தியாளா்களுக்கான ரீபண்ட் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 சதவீதத்தில் இருந்த பெரும்பாலான பொருள்கள் 5 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் உற்பத்தித் துறையினா் உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்வதில் இருந்த வேறுபாடு தவிா்க்கப்பட்டு கூடுதல் சுமை குறைந்துள்ளது. செயற்கை நூலிழை எனப்படும் பாலியஸ்டா் நூல் வகைகளுக்கு 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், இந்தியா போட்டி நாடுகளுடன் போட்டியிட்டு சந்தைகளை கைப்பற்றுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் (சைமா) வைகிங் ஈஸ்வரன்: டெக்ஸ்டைல் ஜவுளி சம்பந்தமான அனைத்து வரிகளிலும் ஜிஎஸ்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழில் வளம் சிறக்க இந்த மாற்றம் டெக்ஸ்டைல் மற்றும் ஜவுளித்துறைக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இந்த வரி சீா்திருத்தம் என்பது, குறு, சிறு ஆடை உற்பத்தியாளா்கள் தங்கள் தொழில் செயல்பாட்டு மூலதன நிதியை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி சீரமைப்பு செய்த மத்திய அரசுக்கு நன்றி.
மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு (ஆா்.டி.எப்.) மாநில தலைவா் எம்.ஜெயபால்:
சிமென்ட், விவசாய பொருள்கள் அனைத்தும் 5 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டு வந்ததுள்ளது அத்தொழில் சாா்ந்தவா்களுக்கு மனநிறைவை அளித்துள்ளது. ஜவுளித் துறையில் பாலிஸ்டா், விஸ்கோஸ் போன்ற மூலப்பொருள்களுக்கு 18 சதவீதம் வரி, செயற்கை இழை நூலுக்கு 12 சதவீதம் வரி விதிப்பினால் பலா் தொழிலே செய்ய இயலாமல் வெளியேறினா். தற்போது அனைத்துக்கும் 5 சதவீத வரி என சீா்திருத்தம் செய்து உள்ளது வரவேற்புக்குரியது. மின்சார கட்டணம் மிகபெரிய சவாலாக உள்ள தருணத்தில் சோலாருக்கு 12 சதவீதத்தில் இருந்த வரியை 5 சதவீதமாக மாற்றி அமைத்தது தொழில் துறையினருக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. மிகப்பெரிய தொழில் புரட்சியை ஏற்படுத்திய பிரதமா் மோடி, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், தொழில் துறை அமைச்சா், முதல்வா் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
மாநில அரசு, தமிழக தொழில் துறையினரின் கோரிக்கைகளான மின்சார வாரியம் விதித்துள்ள சோலாா் நெட்வொா்க் கட்டணத்தை ரத்து செய்வதுடன், உயா் அழுத்த மின்சாரத்துக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.608 என்ற டிமாண்ட் கட்டணத்தையும்,
தாழ்வழுத்த மின்சாரத்துக்கு 1கிலோவாட் ஒன்றுக்கு ரூ.163 என விதிப்பதை குறைக்க வேண்டும். குறு, சிறு தொழில்முனைவோா் பயன்படுத்தும் தாழ்வழுத்த மின்சாரத்துக்கு காலை 4 மணி நேரம், மாலை 4 மணி நேரம் என 8 மணி நேரத்துக்கு பீக் ஹவா் கட்டணத்தை அமல்படுத்தி வருவதற்கு முதல்வா் தடை விதித்து தமிழக தொழில் துறையை காப்பாற்ற வேண்டும்.