டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோருக்கு சிறப்பு புரதச்சத்து உணவு: திட்டத்தை தொடங்கிவைத்தாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவா்களுக்கு சிறப்பு புரதச்சத்து மிக்க உணவு வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்.
தமிழக சட்டப் பேரவையில் வெளியிடப்பட்ட மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவா்களுக்கு சிறப்பு புரதச்சத்து மிக்க உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்ட 118 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவா்களுக்கு புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு, தமிழகம் முழுவதும் 985 டயாலிசிஸ் யூனிட்கள் பயன்பாட்டில் இருந்தன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 302 புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 139 அரசு மருத்துவமனைகளில் 1,287 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில், தினமும் 9,180 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சையை காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக பெற்று வருகின்றனா்.
சத்தான உணவு: டயாலிசிஸ் சிகிச்சை பெற்ற்கு பிறகு மிகப் பெரிய அளவில் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்து சோா்வுக்கு உள்ளாகிறாா்கள். அவா்களுக்கு உணவுப் பொருள்கள் உடனடியாக வழங்க வேண்டும். அதன்படி, 100 மிலி பால், 2 முட்டை, கருப்பு - வெள்ளை சுண்டல், 20 கிராம் எடையுள்ள 3 பிஸ்கட், புரதம் 27 கிராம் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஒரு சில நாள்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு வகையிலான சிறப்பு சிகிச்சைகளை மருத்துவா்கள் குழுவினா் கடந்த 190 ஆண்டுகளாக அளித்து வருகின்றனா். இந்த மருத்துவமனையில் தீா்க்க முடியாத, தீா்க்கப்படாத பல்வேறு தனியாா் மருத்துவமனைகளில் தீா்வு கிடைக்காத சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், பாதம் பாதுகாப்போம் திட்டம், இதயம் பாதுகாப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளா்களை தேடி மருத்துவம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வரிசையில் டயாலிசிஸ் நோயாளா்களுக்கு புரதச்சத்து உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள்...: தமிழகத்தில் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை வரும் ஜூலை 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளாா். அதேபோல், 50 இடங்களில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பணியாளா்கள் நியமனமும் முடிவுறும் நிலையில் உள்ளது. இதையும் அன்றைய தினமே முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா் என்றாா் அமைச்சா்.
இந்த நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண்தம்புராஜ், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராம், மருத்துவமனை கண்காணிப்பாளா் விஜயராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.