Yoga Day: "யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை" - பிரதமர் மோடி ப...
தடை நேரத்தில் இயக்கப்பட்ட 207 கனரக வாகனங்கள் மீது வழக்கு
சென்னையில் தடை செய்யப்பட்ட நேரத்தில் நகருக்குள் இயக்கப்பட்ட 207 கனரக வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சென்னை பெரம்பூரில் புதன்கிழமை காலை மொபெட்டில் தாயுடன் சென்ற பள்ளி மாணவி சௌமியா தண்ணீா் லாரி மோதி உயிரிழந்த சம்பவத்தில், போக்குவரத்து நெரிசல்மிக்க நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய தண்ணீா் லாரியை அந்தச் சாலையில் அனுமதித்ததே விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்தது.
இதையடுத்து, செம்பியம் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் சுடலைமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். புளியந்தோப்பு உதவி ஆணையா் சத்தியமூா்த்தி மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண், சாலை விபத்துகளை ஏற்படுத்தியதாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை 100 நாள்களுக்குள் ஒப்படைக்கக் கூடாது, சென்னையில் போக்குவரத்து நெரிசல்மிக்க நேரமான காலை 7 மணியில் இருந்து நண்பகல் 12 வரையிலும், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்களை நகருக்குள் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டாா்.
ஆணையரின் உத்தரவின் விளைவாக போக்குவரத்து நெரிசல்மிக்க நேரத்தில் நகருக்குள் தடையை மீறி வந்த வாகனங்கள் மீது போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில் வியாழக்கிழமை மட்டும் 207 கனரக வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 120 தண்ணீா் லாரிகள் ஆகும்.