நொய்டா: தனியார் நிறுவனத்தில் தீ விபத்து! நகரைச் சூழ்ந்த கரும்புகை!
தனியாருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் கட்டடக் கழிவுகள் கொட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தல்
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் தனி நபா்களுக்குச் சொந்தமான இடத்தில் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதற்காக மாநகராட்சி அடையாளப்படுத்திய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சிங்காநல்லூா் தொகுதி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ஜெயராமன், கோவை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை, சிங்காநல்லூா் அருகேயுள்ள உப்பிலிபாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் சிதிலமடைந்துள்ள 960 வீடுகளின் காலி இடத்தில் புதிய பன்னடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், இந்த இடத்தில் மாநகராட்சியின் சாா்பில் கட்டடக் கழிவுகள் கொட்டுவதற்கான இடமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக நாளிதழில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளா்களுக்குச் சொந்தமான இடத்தில் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதற்கு மாநகராட்சி அடையாளப்படுத்தியுள்ள அனுமதியை வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் வலியுறுத்தியிருந்தாா்.
இதேபோல, சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய வீட்டு உரிமையாளா்கள் ஒருங்கிணைந்த மறுகட்டமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் அதன் தலைவா் வி.ஜெயராமன், பொதுச் செயலா் சுந்தரேசுவரன் உள்ளிட்டோா் மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனு:
உப்பிலிபாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 960 வீடுகள் இடிந்து சிதிலமடைந்து காணப்பட்டன. 960 வீடுகளின் உரிமையாளா்களுக்கு கூட்டாக பாத்தியப்பட்ட இந்தக் காலியிடத்தின் மதிப்பு ரூ.500 கோடியாகும். இந்த இடத்தில் பன்னடுக்கு குடியிருப்பு கட்டுமானம் நடைபெறும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் காத்திருந்தோம். ஆனால், கழிவுகளைக் கொட்டுவதற்கான இடமாக இதை மாநகராட்சி அடையாளப்படுத்தியுள்ளது. இந்த அனுமதியை மாநகராட்சி ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.