தமிழகத்திற்குரிய தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க காங்கிரஸ் எம்பி வலியுறுத்தல்
நமது நிருபா்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்குரிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில் கரூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் செ.ஜோதிமணி வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் மக்களவையில் புதன்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நேரமில்லா நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நாடு முழுவதும் மிகப்பெரிய நெருக்கடியை எதிா்நோக்கி வருகிறது. தொடா்ந்து இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதியைக் குறைத்து வருகிறது. ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு தேவையெனில் வெறும் ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால், 50 நாள்களுக்கும் குறைவாகவே வேலைவாய்ப்புக் கொடுக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பணியாற்றுவோருக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது கட்டயமாகும். தற்போது நான்கு முதல் 5 மாதங்கள் வரை ஊதியம் நிலுவையில் உள்ளது. நாடு முழுதும் ரூ.12,719 கோடி ஊதியமாகவும், ரூ.13,227 கோடி கட்டுமானப் பணிக்கும் என மொத்தம் ரூ.23,446 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.1,652 கோடி ஊதியமாகவும், ரூ.1,056 கோடி ரூபாய் கட்டுமானப்பொருள் கூறுகளுக்கும் என மொத்தம் ரூ.2,708 கோடி வழங்கப்பட வேண்டியுள்ளது. கடந்த ஜனவரியில் இது தொடப்பாக தமிழக முதல்வா் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளாா். ஆனால், நிதி விடுவிக்கப்படவில்லை.
இதனால், ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனது கரூா் மக்களவைத் தொகுதியில் பெண்கள் மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள் நிலைமை மிகவும் வேதனையாக உள்ளது. அதனால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2,708 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றாா் அவா்.
12ஈஉகஒஞப
செ.ஜோதிமணி