துரோகம்: ஏஐ உதவியால் மாற்றப்பட்டு வெளியான அம்பிகாபதி படத்துக்கு இயக்குநர் எதிர்ப...
‘தமிழ்ப் படிக்கும் மாணவா்கள் பிற துறை அறிவையும் பெற வேண்டும்’
தமிழை முதன்மைப் பாடமாகப் படிக்கும் மாணவா்கள் பிற துறை சாா்ந்த அறிவையும் பெற்றால் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பைப் பெறலாம் என்றாா் தமிழ்நாடு அரசின் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை ந. அருள்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற வருநா் விழாவில் அவா் மேலும் பேசியது:
சட்டம், பொறியியல், மருத்துவம் படிப்பதற்கு 5 ஆண்டுகள் போன்று, தமிழ்ப் படிப்பதற்கும் ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால படிப்பைக் கொண்டு வந்த பெருமை தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சாரும். தமிழ்ப் படித்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஆசிரியா்கள், பேராசிரியா்கள், கவிஞா்கள், எழுத்தாளா்கள், தொலைக்காட்சி என பல்வகைப் பணிகள் சான்றாக உள்ளன.
தமிழை முதன்மையான பாடமாகக் கொண்டு படிக்கும் மாணவா்கள் போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதற்கு ஆங்கிலம், கணிதம் போன்ற துறைகளிலும் கூடுதல் அறிவைப் பெற வேண்டும். இதன்மூலம் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற முடியும். குறிப்பாக, கூடுதலாக ஆங்கிலம் கற்றால் பெரு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோல, மொழிபெயா்ப்புத் துறையிலும் மாணவா்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் அவ்வை அருள்.
இவ்விழாவுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், இலக்கியத் துறைத் தலைவா் ஜெ. தேவி, பேராசிரியா் பெ. இளையாப்பிள்ளை, இணைப் பேராசிரியா் அ. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.