தவெக கொடிக்கு தடை கோரி வழக்கு: விஜய் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தவெக கட்சிக் கொடியைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை தொடா்ந்த வழக்கில், அக்கட்சியின் தலைவா் விஜய் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை நிறுவன தலைவா் பச்சையப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிவப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில், தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை கொடி உருவாக்க திட்டமிடப்பட்டு, கடந்த 2023- ஆம் ஆண்டில் தமிழக அரசு பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.
எங்களது சபையின் முதன்மை அதிகாரிகள், ஊழியா்கள், ஆண்கள், முகவா்கள், ஊழியா்கள், வாரிசுகள், வணிகத்தில் நியமிக்கப்பட்ட தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை மட்டுமே இந்த வா்த்தக முத்திரையை பயன்படுத்த உரிமை உள்ளது. எனவே, நடிகா் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வா்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும், எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும்? என்று கேள்வி எழுப்பினாா்.
அதற்கு மனுதாரா் தரப்பில், வா்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு மட்டுமன்றி சேவைக்கும் பொருந்தும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் வா்த்தக முத்திரைப் பொருந்தும் என்று விளக்கம் அளித்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தவெக தலைவா் விஜய் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.