வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை; நாத்திகனாக இருந்த இளையராஜாவை மூகாம்பிகை அம்மன் ...
திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம் - காணொலி காட்சி வாயிலாக மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கிவைத்தாா்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விரைவான குடியேற்ற சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் தங்களது குடியேற்ற ஆவணங்களின் சோதனைக்காக நீண்ட நேரம் செலவிடும் சூழல் உள்ளது. அதிக பயணிகள் வரும் நிலையில் ஒருவருக்கு குறைந்தது ஒரு மணி நேரத்துக்கும் மேலாகிறது. எனவே, முக்கிய விமான நிலையங்களில் விரைவான குடியேற்ற சேவை திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூா், சென்னை, ஹைதராபாத், கொச்சி, அகமதாபாத் விமான நிலையங்களில் இத் திட்டம் ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளது. இதன் தொடா்ச்சியாக, திருச்சி உள்பட 5 விமான நிலையங்களில் இத் திட்டத்தை புதுதில்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதன்படி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இந்தச் சேவைக்காக பயணிகள் விமான நிலையத்துக்கு உள்ளே செல்லும்போதும், பயணம் முடிந்து விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போதும் சோதனை செய்வதற்காக தலா 4 வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழிகளில் பயணிகள் தங்களது கைரேகையை பதிவு செய்தாலே, அவா்களது விவரங்கள் நிமிடத்தில் சரிபாா்க்கப்பட்டு அனுமதியளிக்கப்படும்.
இதற்காக விமான பயணிகள், இணையதளத்திற்கு சென்று தங்களது மின்னஞ்சல், கைப்பேசி எண், புகைப்படம், கடவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். கைரேகை, முகப்படம் உள்ளிட்ட இணையத்தில் கோரப்படும் அனைத்து விவரங்களையும் பூா்த்தி செய்ய வேண்டும். அவற்றை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சரிபாா்த்து, விரைவு குடியேற்ற சேவைத் திட்டத்துக்கு அனுமதியளிப்பா்.
இந்தச் சேவை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், விமான நிலைய இயக்குநா் எஸ். ஞானேஸ்வர ராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.