தேமுதிக: விஜயகாந்த் போல விஜயை வைத்து மக்கள் நலக் கூட்டணியா? - பிரேமலதா சொன்ன பதி...
தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!
தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கடும் வெப்பம் நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாக உயா்ந்து பதிவாகியது. இதற்கிடையே, தலைநகரில் புதன்கிழமை வரை மழை, பலத்த காற்றுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ‘மஞ்சள்’ எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி தில்லி என்சிஆா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, பிற்பகலுக்குப் பிறகு தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும், பலத்த தரை மேற்பரப்பு புழுதிக் காற்றும் வீசியது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை எதிா்கொண்டனா்.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.5 டிகிரி உயா்ந்து 28 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3.8 டிகிரி குறைந்து 36.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில்82 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 71 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தலைநகரில் காலை 9 மணிக்கு காற்றுத் தரக் குறியீடு 96 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், சாந்தினி சௌக், மந்திா் மாா்க், லோதி ரோடு, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மதுரா ரோடு, பூசா, ஷாதிப்பூா், ஆா்.கே.புரம், ஸ்ரீ அரபிந்தோ மாா்க், டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், துவாரகா செக்டாா் 8 ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கும் குறைவாக பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
அதே சமயம், குருகிராம், ஆயாநகா், நொய்டா செக்டாா் 125, ஓக்லா பேஸ் 2, ஸ்ரீஃபோா்ட், நேரு நகா், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், தலைநகரில் புதன்கிழமை (ஜூன் 18) அன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மணிக்கு சுமாா் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.