தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!
தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது:
ஏராளமான தடைகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை தடுக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களின் சம்பளத்திற்காகவும் ஆண்டுதோறும் வழங்கப்படும் 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நேற்றையதினம், நம்முடைய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நான் கடிதம் எழுதினேன்.
அதற்கு இன்றைக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அறிவுரை சொல்கிறார். நான் கேட்கிறேன். கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான், கல்வித் துறைக்கு தர வேண்டிய நிதியைத் தருவோம் என்று ‘Blackmail’ செய்வதற்கு பெயர் என்ன? அரசியல் இல்லையா?
கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிப்பது அரசியல் இல்லையா? பல மொழிகள் கொண்ட இந்திய நாட்டை – ஒரு மொழி நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா?
பல்வேறு மொழி பேசும் இன மக்கள் வாழும் நாட்டை, ஒற்றை இன நாடாக மாற்ற நினைப்பது அரசியல் இல்லையா? ஒரு திட்டத்திற்கான நிதியை, மற்றொரு திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான நிபந்தனையாக மாற்றுவது அரசியல் இல்லையா?
நீங்கள் செய்வது அரசியலா? இல்லையா? என்பதை நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அரசியல் செய்வது நீங்களா? நாங்களா? மக்கள் நலத்திட்டங்களுக்காக அரசின் நிதியை செலவு செய்பவர்கள் நாங்கள். அரசின் நிதியை மதவெறிக்காகவும் இந்தி – சமஸ்கிருத திணிப்புக்காகவும் செலவு செய்பவர்கள் நீங்கள்.
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு 5,000 கோடி ரூபாய் இழக்கிறது என்று சொல்லும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே...
இதையும் படிக்க: வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!
தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும்... மறந்துவிடாதீர்கள்! கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சித் தத்துவம்! அதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை! அதைகூட புரிந்துக்கொள்ளாதவர்கள் மத்தியத்தை ஆள்வதுதான் இந்தியாவுக்கே மிகப்பெரிய சாபக்கேடு!
தேசியக் கல்விக் கொள்கை என்பதே, கல்வியை வளர்ப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. இந்தியை வளர்க்க கொண்டு வரப்பட்டிருக்கிறது! நேரடியாக திணித்தால் எதிர்ப்பார்கள் என்று, கல்விக் கொள்கை மூலமாக முலாம் பூசி திணிக்கிறார்கள்! தாய் மொழியை வளர்க்கப் போவதாக மத்திய அமைச்சர் சொல்கிறார்.
தர்மேந்திர பிரதான் அவர்களே... தாய்மொழித் தமிழை வளர்க்க எங்களுக்குத் தெரியும். இந்தி மொழியால் தங்களின் தாய்மொழிகளை தொலைத்துவிட்டு நிற்பவர்களிடம் கேளுங்கள். உங்கள் சதி திட்டத்தின் ஆபத்து புரியும்! நீங்கள் வந்துதான் வளர்ப்பீர்கள் என்று தமிழ் உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை!
மத்திய அரசுக்கு நான் கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறேன். தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும் பார்க்கவேண்டும் என்று ஆசை படாதீர்கள்! தமிழுக்கும் - தமிழ்நாட்டுக்கும் - தமிழினத்துக்கும் எதிரான எந்தச் செயல்பாடுகளும் நான் இருக்கும்வரைக்கும், தி.மு.க. இருக்கும்வரைக்கும் நிச்சயம், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரைக்கும் இந்த மண்ணுக்குள் வர முடியாது!
நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொருத்தவரைக்கும் மக்கள் முன்னேற்றம் ஒரு பக்கம் என்றால், அதற்கான தடைகளை உடைப்பது இன்னொரு பக்கம் என்று இரு பாதை பாய்ச்சலை இன்றைய தமிழ்நாடு அரசு நடத்திக்கொண்டு வருகிறது. இது போன்ற தடைகள் எங்களுக்குப் புதிதல்ல. தடைகள் எந்தப் பக்கம் வந்தாலும், அதை உடை என்று பழகியவர்கள் நாங்கள் என்பதால் வெற்றிப் பயணத்தை தொடர்கிறோம். மக்களான உங்களுடைய ஆதரவால் வெற்றி என்றென்றும் தொடரும் என்று பேசினார்.