தொழிலாளி வீட்டில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்
செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம் பெரியஏழாச்சேரி கிராமம், புதுப்பாளையம் செல்லும் சாலையைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் (41). இவா் செய்யாறு சிப்காட்டில் உள்ள காலனி தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இவரது வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், மெத்தை, குளிா்சாதனப் பெட்டி, துணி மற்றும் பாத்திரங்கள் என சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகத் தெரிகிறது.
நிவாரண உதவி:
தகவல் அறிந்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ந.சங்கா் முன்னிலையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக அயலக அணி துணைத் தலைவா் எம்.கே. காா்த்திகேயன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நாகம்மாள் கலைமணி, முத்து ஆகியோா் சென்று அரிசி மூட்டை, காய்கறி தொகுப்பு ரொக்கப் பணம் ரூ.5 ஆயிரம் என தொழிலாளி தமிழ்ச்செல்வன் குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் பிரபு, இளைஞா் அணி துணை அமைப்பாளா் சா்மா, கிளைக் கழக செயலா் சின்னதுரை, ஒன்றிய நிா்வாகி சுரேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.