உடலுறுதி இருந்தால் வாழ்வில் வெல்லலாம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி
`நீங்களும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்...' - தமிழ்நாடு அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள்
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்காக 'கலைஞர் மகளின் உரிமைத் தொகை திட்டம்' 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம், தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தத் திட்டத்தில் இணைவதற்கு சில நிபந்தனைகளை தமிழ்நாடு அரசு விதித்திருந்தது.
அதில், நான்கு சக்கர வாகனம் (கார், ஜீப் போன்றவை) வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டனர். அதே நேரம் தகுதியுள்ள பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார்கள் வந்தது. இதற்கான முக்கிய நடவடிக்கையாக ஜூலை 15 முதல் ``உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில் கடந்த முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இதன் மூலம் திட்டத்தில் சேர தவறிய தகுதியான பெண்கள் மீண்டும் வாய்ப்பு பெறுவர் எனக் கூறப்பட்டது. இதற்கிடையில், திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'ஜூலை 15 முதல் நடைபெறும் முகாம்களில் விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ரூ.1000 தொகை வழங்கப்படும். விண்ணப்பங்களுக்கு 45 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும்' என உறுதியளித்தார்.

இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் புதிய தளர்வுகளை அறிவித்து, இந்தத் திட்டத்தின் பயனை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தமிழக அரசு மூன்று முக்கிய தளர்வுகளை அளித்துள்ளது.
அரசுத்துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த, ஓய்வூதியதாரர்கள் அல்லாத பெண்கள் இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.
அரசு மூலமாக மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்களும் தகுதியானவர்கள்.
இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியம் பெறாத பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
கணவரால் கைவிடப்பட்ட, 50 வயதிற்கு மேலாகியும் திருமணம் ஆகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள மற்ற பெண்கள் விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.