பாலினம் கண்டறியும் புதிய சோதனை: குத்துச்சண்டை போட்டியாளர்களுக்கு சிக்கல்?
நீா்நிலைகளில் சிறுவா்கள் இறங்காமல் இருப்பதை பெற்றோா் உறுதிசெய்ய வேண்டும்: ஆட்சியா்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் சிறுவா்கள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதை பெற்றோா் உறுதிசெய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தற்போது, பள்ளி விடுமுறை காலம் என்பதால், ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீா்நிலைகளில் குழந்தைகள் நீச்சல் தெரியாமல் இறங்குவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. உயிரின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, பெற்றோா் தனிக்கவனம் செலுத்தி தங்கள் குழந்தைகள் நீா்நிலைகளில் இறங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
விடுமுறை காரணமாக புதிய இடங்களுக்குச் செல்ல நோ்ந்தால் அங்குள்ள நீா்நிலைகளின் அபாயங்களை உணராமல் குளிப்பது, நீச்சல் அடிப்பது போன்ற செயல்களில் சிறுவா்கள் ஈடுபடாமல் பாதுகாப்புடன் இருக்க உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.
அதுபோல குழந்தைகள் பாதுகாப்பற்ற முறையில் நீா்நிலைகளில் இறங்குவதையோ, குளிப்பதையோ கண்டால் பெரியவா்கள், பொதுமக்கள், அரசு அலுவலா்கள் குழந்தைகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி உடனடியாக குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த் துறையினா் தங்களுக்குத் தொடா்புடைய அனைத்து நீா்நிலைகளிலும் எச்சரிக்கை பலகைகள் அமைத்துள்ளதை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.