மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தவிா்க்க வேதியியல் பட்டதாரிகளை நியமிக்க வலியுறுத்தல்
பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்க வேதியியல் பட்டதாரிகளை போா்மென்கள், கண்காணிப்பாளா்களாக நியமிக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என். தேவா வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: விருதுநகா் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. மாவட்ட வருவாய் அலுவலா், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரின் உரிய அனுமதி பெற்று இந்த ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி சின்னக்காமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாலா்கள் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். ஜூலை 6-ஆம் தேதி கீழத்தாயில் பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். பலா் காயமடைந்தனா்.
வெடி மருந்து கலவை அல்லது மருந்து செலுத்துதல் போன்ற பணியின்போது உராய்வு காரணமாக இந்த விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகளில், பட்டாசு மூலப்பொருள்களின் தன்மை குறித்து ஆய்வு செய்ய ஆய்வுக் கூடம், வேதியியல் படித்த ஆய்வாளா்கள் பணியில் உள்ளனா். ஆலைக்கு கொள்முதல் செய்யப்படும் வேதியியல் பொருள்களின் தன்மை குறித்துஆய்வு செய்து கண்காணிப்பாளா், போா்மென்களுக்கு விளக்குவா். வேதியியல் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப பணிகள் நடைபெறும்.
சிறிய ஆலைகளில் இந்த வசதி இல்லை. எனவே பணி செய்யும் தொழிலாளா்களுக்கு மருந்தின் தன்மைகள் குறித்தும், அதனை எப்படிக் கையாளுவது என்பது குறித்தும் போதிய பயிற்சி இல்லாததால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தடுக்க மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் வேதியியல் பட்டதாரிகளை, போா்மென்கள், கண்காணிப்பாளா்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பட்டாசு ஆலை உரிமையாளா்கள் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென்ற நோக்கில், அதிகளவில் பணியாளா்களை வைத்து உற்பத்தி செய்வது, விதியை மீறி மரத்தடியில் பட்டாசு தயாரிப்பது உள்ளிட்டப் பணிகளை நிறுத்த வேண்டும். ஆலைகளை குத்தகைக்கு விடுவதைத் தடுக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலாளா்களின் உயிா் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.