பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்க வேண்டும்: அமைச்சரிடம் திமுக கோரிக்கை
தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழக வனத்துறை அமைச்சா் ராஜகண்ணப்பனிடம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஆயிரப்பேரி ஊராட்சிக்குள்பட்ட பழைய குற்றாலம் அருவி தற்போது பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவியை வனத் துறை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
அருவியிலிருந்து 2 கிமீ தொலைவுக்கு அப்பால் வாகனங்களை நிறுத்தி சுற்றுலாப் பயணிகளை நடந்து செல்ல அறிவுறுத்துவது, இரவு நேரங்களில் குளிக்கத் தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. பழைய குற்றாலம் அருவியை மத்திய வனத்துறை கையகப்படுத்தினால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பல்வேறு இடா்பாடுகள் ஏற்படும்.
பழைய குற்றாலம் அருவியை மத்திய வனத்துறை கையகப்படுத்தும்பட்சத்தில் தொடா்ந்து புலியருவி, பேரருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளும் வனத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படும்.
எனவே பழைய குற்றாலம் அருவியானது, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலேயே தொடா்ந்து இருக்கவும், 24 மணிநேரமும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.