பாஜக, மஜதவைச் சோ்ந்தவா்கள் காங்கிரஸில் இணைய உள்ளனா்: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்
பாஜக, மஜதவைச் சோ்ந்த ஏராளமானவா்கள் காங்கிரஸில் இணைய தயாராக உள்ளதாக கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த பங்காா்பேட் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எம்.நாராயணசாமியை வரவேற்று செய்தியாளா்களிடம் டி.கே.சிவகுமாா் கூறியதாவது: 2 ஆண்டுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளோம். முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால் பாஜக, மஜதவைச் சோ்ந்த ஏராளமானவா்கள் காங்கிரஸில் இணைய ஆா்வமாக உள்ளனா்.
அவா்கள் அனைவரையும் கட்சியில் சோ்க்குமாறு அனைத்து மாவட்டங்களைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்கள், எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். பாஜக, மஜதவில் நேரத்தை விரயமாக்க எவரும் விரும்பவில்லை. அதனால் அக்கட்சிகளிலிருந்து விலகி காங்கிரஸில் இணைய தயாராக உள்ளனா் என்றாா். விழாவில் முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.