பாஜக வெற்றி பெற்றால் மட்டும் தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பதா? -எதிர்க்கட்சிகளுக்கு பாஜக கேள்வி!
பாஜக வெற்றி பெற்றால் மட்டும் தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பதா? என்று ராகுல் காந்திக்கு பாஜக கேள்வியெழுப்பியது.
கடந்தாண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ‘வாக்குத் திருட்டு’ நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியுள்ள பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதைக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் சென்று சேர்க்கும் விதமாக ‘வாக்குரிமைப் பேரணி’ என்ற பெயரில் பிகாரில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இது குறித்து, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் எதிர்க்கட்சிகளை விமர்சித்து தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக பேசியிருப்பதாவது:
“ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் வாக்குத் திருட்டை அனுமதிக்க மாட்டோம் என்று தொடர்ந்து சொல்லி வருகின்றனர். வாக்குத் திருட்டு என்று அவர்கள் குறிப்பிடுவது முற்றிலும் பொய் மற்றும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகும்.
உங்களுக்கு(எதிர்க்கட்சிகள்) ஆதரவாக மக்கள் வாக்கு செலுத்தினால், அப்போது மட்டும் தேர்தல் ஆணையம் நல்லதாகப் படுகிறது, நீங்கள் தேர்தலில் தோற்கும்போது அதன் மீது குற்றச்சாட்டை சுமத்துகிறீர்கள்.
ஹிமாசல பிரதேசத்திலும் தெலங்கானாவிலும் நீங்கள் வெற்றி பெறும் போது, தேர்தல் ஆணையத்தை நன்றாகக் குறிப்பிடுகிறீர்கள், தோற்றால் மோசமாக குறிப்பிட்டு பேசுகிறீர்கள். மகாராஷ்டிரத்தில் நீங்கள் தோற்றதால் தேர்தல் ஆணையத்தை மோசம் என்கிறீர்கள். மகாராஷ்டிரத்தில் நீங்கள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டீர்கள். தில்லியிலும் அரவிந்த் கேஜரிவால் நீக்கப்பட்டுவிட்டார்.
ராகுல் காந்தியும் காங்கிரஸும் வாக்கு பெறாவிட்டால், அதற்கு பாஜக என்ன செய்ய முடியும்? பெகாசஸ் வழக்கில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளபோதிலும், அவர்கள் தரப்பிலிருந்து விசாரணைக்காக கைப்பேசிகளை வழங்க மறுக்கிறார்கள். மேலும், இவ்விவகாரத்தில் அவர்கள் ஊடகத்தையும் அவமதித்திருக்கிறார்கள்.
பிகாரில் பொய்யான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உருவாக்குவதன் மூலம், எங்களது பொறுமையை சோதிக்கிறீர்கள். இதனை சகித்துக்கொண்டிருக்க மாட்டோம்.
பிரதமர் மோடியைப் போல ஒரு பொய் பேசும் மனிதரைப் பார்த்ததேயில்லை என்கிறார் தேஜஸ்வி யாதவ். இப்படியெல்லாம் பேசித்தான் பிகார் முதல்வராக வர வேண்டுமென அவர் ஆசைப்படுகிறார் போலும்? மோடியின் தலைமையின்கீழ், இந்திய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இதையடுத்து, தேஜஸ்வி யாதவ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். ஏற்கெனவே மக்கள் அவருக்கு வாக்கு செலுத்த முன் வரவில்லை. இந்த நிலையில், இது மேலும் அவரை மக்கள் நிராகரிக்க வழிவகை செய்யும். ராகுல் காந்தியுடன் சேர்ந்துகொண்டு தேஜஸ்வி யாதவ், தனது சொந்தக் கட்சியை மூழ்கடித்து வருகிறார்” என்றார்.