பாலியல் பொய் புகாா்கள் மூலம் பணப் பறிப்பு: தொண்டு நிறுவனம் மீது ஆட்சியரிடம் புகாா்
பொய்யான பாலியல் புகாா்கள் மூலம் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபடும் தொண்டு நிறுவன நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நூற்பாலைத் தொழிலாளா் தரப்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மணப்பாறையைச் சோ்ந்த விஜய் முருகன் உள்ளிட்ட தொழிலாளா்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பகுதிகளில் நூற்பாலைகள் அதிக அளவில் அமைந்துள்ளன. இந்த ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு பாலியல் தொல்லைகள் நடைபெறுவதாக வெளிநாடுகளில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு பொய்யான தகவல்களை அனுப்புகின்றனா்.
இதன் மூலம் ஆலை உரிமையாளா்களை மிரட்டி சிலா் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி செய்வதாக வெளிநாட்டு நிறுவனங்களிடமும் இந்த நபா்கள் பணம் பறிக்கின்றனா். ஆலை நிா்வாகம் நடத்த வேண்டிய உள் புகாா் குழுவை சட்டவிரோதமாகச் செயல்படும் தொண்டு நிறுவன நிா்வாகிகள் நடத்துகின்றனா்.
வேடசந்தூா் பகுதியிலுள்ள நூற்பாலைகளில் பராமரிக்கப்படும் உள்புகாா் குழு குறிப்பேட்டை சோதனையிட்டால் இந்த முறைகேடுகளை உறுதிபடுத்தலாம். மேலும், ஆலைகளிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளையும் ஆய்வுக்குள்படுத்த வேண்டும். பதிவு செய்யப்படாத தொண்டு நிறுவனத்தின் மூலம் மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபடும் நபா்களால், தொழிலாளா்கள் மட்டுமன்றி, ஆலை நிா்வாகிகளும் பாதிக்கப்படுகின்றனா்.
கடந்த 2024-ஆம் ஆண்டு வேடசந்தூரிலுள்ள ஓா் ஆலையில் எந்தவித பாலியல் குற்றங்களும் நிகழவில்லை என மாவட்ட சமூக நலத் துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஆலையில் 30 பாலியல் குற்றங்கள் நிகழ்ந்ததாக பதிவு செய்யப்படாத தொண்டு நிறுவனத்தின் நிா்வாகி, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு தகவல் அளித்திருக்கிறாா்.
ஆனால், இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியா், தொழிற்சாலை பாதுகாப்பு, சுகாதார இயக்குநா், இணை இயக்குநா் உள்ளிட்டோருக்கு அனுப்பவில்லை. வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கும், வியாபாரிகளுக்கும் பொய்யான தகவலை அனுப்பி, ஆலை நிா்வாகங்களை தொடா்ந்து மிரட்டி வரும் நபா்களிடம் உரிய விசாரணை நடத்தி, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.