`பிற மொழிகளைக் கற்கும் போதுதான் வருங்காலம் சிறக்கும்!' - பிரேமலதா
கும்பகோணத்தில் நடைபெற்ற தனியார் ரிசார்ட் தொடக்க விழாவில் கலந்துகொண்ட தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``டெல்டா பகுதி விவசாயிகள் வாழ்ந்தால்தான் தமிழ்நாடு வாழ்ந்ததாக வரலாறு. ராஜராஜ சோழன் வாழந்த பூமி இது. கேப்டனும், நானும் கும்பகோணத்தில் உள்ள பல கோயில்களுக்கு வந்திருக்கிறோம். அனைத்து மொழிகளையும் கற்போம், அன்னை மொழியைக் காப்போம் என்பது கட்சித் தலைவர் விஜயகாந்த் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது.

நம் தாய் மொழியான தமிழ் உயிர் போன்றது. நாம் மற்ற மொழிகளை, கற்கும் போதுதான், தமிழகத்தில் இருந்து வெளியில் செல்லும் போது, வேலை வாய்ப்பு கிடைக்கும். வருங்காலம் சிறக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவரவர் எந்த மொழியைப் படித்தாலும் தப்பில்லை. மொழியைக் கற்பதாலோ, பிடித்த உணவைச் சாப்பிடுவதாலோ, கடவுளை ஏற்றுக்கொள்வதாலோ இங்கு எந்த பாகுபாடும் பிரிவினையும் கிடையாது. இதில், நாங்கள் உறுதியாக இருப்போம்.
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அன்னை மொழியைக் காத்து, அனைத்து மொழிகளையும் காக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு எங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அழைப்பு வந்து விட்டது. நாங்கள் உறுதியாக அந்த கூட்டத்தில் பங்கேற்போம். தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.
டாஸ்மாக், கள்ளச்சாராயம், போதை வஸ்துக்கள் அதிகரிப்பு, வேலை இல்லாத நிலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. ஏப்ரலில் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் முடிந்த பிறகு, கட்சியில் பொறுப்பாளர்கள் நியமித்து, கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளோம். அப்போது, கூட்டணிக் கட்சிக்குள், தொகுதிப் பங்கீடு, அந்த தொகுதிக்கு யார் வேட்பாளர்கள் என்பதை தேர்தல் சமயத்தில் அறிவிப்போம். 2026ம் தேர்தலில், நாங்கள் இடம் பெற்றுள்ள கூட்டணி, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்" என்றார்.