புகைப்பட பிரியர்களுக்கு... விவோ அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்!
புகைப்படம் மற்றும் விடியோ எடுப்பதற்காகவே விவோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
முதலில் சீனாவிலும் அதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்ய விவோ திட்டமிட்டுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம், எக்ஸ் 200 என்ற ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எக்ஸ் 200 அல்ட்ரா என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க அதிக நாட்டமுடையவர்களை இலக்காக வைத்து இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீனாவில் எக்ஸ் 200 அல்ட்ராவை அறிமுகப்படுத்த விவோ திட்டமிட்டுள்ளது. விவோ எக்ஸ் 200, விவோ எக்ஸ் 200 ப்ரோ, விவோ எக்ஸ் 200 மினி ஆகிய ஸ்மார்ட்போன்கள் சீனாவில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே விவோ எக்ஸ் 200 அல்ட்ரா மட்டும் இல்லாமல், விவோ எக்ஸ் 200எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவும் விவோ திட்டமிட்டுள்ளது. இதனால் சீன ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ நிறுவனத்தின் வெளியீடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
சிறப்பம்சங்கள்
விவோ எக்ஸ் 200 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது சாம்சங் நிறுவனத்தின் எச்பி-9 சென்சார் கொண்ட 200MP கேமராவுடன் வெளியாகிறது.
இதோடு மட்டுமின்றி சோனி நிறுவனத்தின் எல்.ஒய்.டி. - 818 (LYT-818) சென்சார் கொண்ட 50MP கேமராவும் உடன் உள்ளது. முன்பக்கம் 50MP செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கேமராக்களுக்கு பெயர் பெற்ற இரு நிறுவனங்களின் சென்சார்கள் உள்ளதால், புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் எடுப்பதில் சிறந்த அனுபவத்தைப் பெற முடியும்.
நீண்ட நேரம் விடியோ எடுக்கும் வகையில் 6000mAh திறன் கொண்ட பேட்டரியும் 90W வேகமாக சார்ஜ் செய்யும் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் விவோ எக்ஸ் 200 அல்ட்ரா எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை விவோ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.