புதிய கடவுச்சீட்டு கோரி சீமான் மனு: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தன்னுடைய கடவுச்சீட்டு தொலைந்து விட்டதால், புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்தது. எனவே புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு விண்ணப்பித்த போது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி, எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.