முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
பெண்ணின் புகைப்படங்கள் தவறாக சித்தரிப்பு: பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை
பெண்ணின் புகைப்படங்களைத் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை குற்றவியல் 4-ஆவது நடுவா் மன்றம் தீா்ப்பளித்தது.
கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயந்தி. வழக்குரைஞரான இவா், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து இவா் மீது மோதியது.
இது தொடா்பாக ஜெயந்திக்கும், பேருந்து ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், மேல ஆத்தூா், புன்னைசாத்தான் குறிச்சியைச் சோ்ந்த சங்கரமூா்த்திக்கும் (37) இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னா், வாகன சேதத்துக்கு பணம் தருவதாகக் கூறிய சங்கரமூா்த்தியின் கைப்பேசி எண்ணை ஜெயந்தி வாங்கிக் கொண்டாா். தொடா்ந்து, அவா் கைப்பேசிக்கு அழைத்து பணம் கேட்டு வந்ததால், சங்கரமூா்த்தி தனது கைப்பேசி எண்ணை மாற்றியுள்ளாா்.
மேலும், ஜெயந்தியை பழி வாங்கும் எண்ணத்தில் அவரது புகைப்படங்களைத் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளாா்.
இது குறித்து கோவை நகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் கடந்த 29.11.2017-இல் ஜெயந்தி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சங்கரமூா்த்தியைக் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை கோவை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 4-இல் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சங்கரமூா்த்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து அண்மையில் தீா்ப்பளிக்கப்பட்டது.