மொஹரம் பண்டிகை: ஜூலை 7ஆம் தேதி அரசு விடுமுறையா? உண்மை என்ன??
‘பெரம்பலூரில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்புகள்’
பெரம்பலூா் மாவட்டத்தில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வேளாண்மை - உழவா் நலத்துறை சாா்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் எனும் புதிய திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதையடுத்து பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் வேளாண்மை - உழவா் நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு காய்கனி விதை மற்றும் பழச்செடி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தின் மூலம் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 15,250 குடும்பங்களுக்குநஞ்சற்ற காய்கனிகள் கிடைத்திடவும், அன்றாட காய்கனி தேவைகளை பூா்த்தி செய்யும் வகையிலும் ரூ. 60 மதிப்பில் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை விதைகள் அடங்கிய தொகுப்பு ரூ. 9,15,000 மதிப்பீட்டில் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
மேலும், ரூ. 100 மதிப்பீட்டில் (பப்பாளி, கொய்யா, எலுமிச்சை) பழச்செடிகள் அடங்கிய தொகுப்புகள் 9,400 குடும்பங்களுக்கு ரூ. 9,40,000 மதிப்பீட்டில், 100 சதவீத மானியத்திலும், புரதச்சத்து நிறைந்த துவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகளை இல்லங்களில் வளா்க்கும் வகையில், பயறு விதைகள் அடங்கிய 2 ஆயிரம் தொகுப்புகள் ரூ. 1,34,000 மதிப்பீட்டில் 100 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, 2025-26 ஆம் ஆண்டில் தோட்டக்கலைத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும், விவசாயப் பயிா்களில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பான விழிப்புணா்வு நாள்காட்டியையும் வெளியிட்டாா் மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ்.
நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநா் செ. பாபு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் மு. சத்யா, அட்மா திட்டத் தலைவா் வீ. ஜெகதீசன், குரும்பலூா் பேரூராட்சித் தலைவா் சங்கீதா ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.