பெற்றோா் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை: தஞ்சை ஆட்சியா்
தஞ்சாவூா் மாவட்டத்தில் பெற்றோா் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது: மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் தாய், தந்தை இருவரும் இல்லாத குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதில், 597 குழந்தைகளுக்கு தாய், தந்தை இருவரும் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும், 12 ஆயிரம் குழந்தைகளுக்கு தந்தையும், 2 ஆயிரத்து 900 குழந்தைகளுக்கு தாயும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில், முதல் கட்டமாக தாயும், தந்தையும் இல்லாத குழந்தைகளைத் தோ்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு வருவாய்த் துறை அலுவலரை பொறுப்பாளராக நியமித்துள்ளோம். அக்குழந்தைகள் எந்தக் குடும்பத்தில் இருக்கின்றனரோ, அக்குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். அக்குழந்தைகளின் படிப்பு எக்காரணத்தைக் கொண்டும் நிற்காமல், பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, உயா் கல்விக்கு போக வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பில் நிறைய பேருக்கு வீடு இல்லை என்பதும், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே வைத்து அக்குடும்பம் இயங்குகிறது என்பதும் தெரிய வந்தது. இக்குடும்பங்களுக்கு என்னென்ன அரசு நலத்திட்ட உதவிகள் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் இலக்கு நிா்ணயித்து சோ்ப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.
மாவட்டத்தில் இடைநிற்றலை தவிா்ப்பதற்காக கல்வித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறை ஊழியா்கள் வீடு, வீடாகச் சென்று, பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சோ்த்து படிக்க வைக்க உறுதிப்படுத்துகின்றனா்.
தூா்வாரும் பணி: மாவட்டத்தில் நீா்வளத் துறை மூலம் 93 சதவீதமும், வேளாண் பொறியியல் துறை மூலம் 97 சதவீதமும் தூா் வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. மேட்டூா் அணை திறக்கும்போது, சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளும் விதமாக தயாா் நிலையில் வைத்திருக்கிறோம் என்றாா் ஆட்சியா்.