இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இந்திய வம்சாவளியினா் உதவிக்கரம்!
பேருந்தில் கிடந்த நகையை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநா் - நடத்துநருக்கு பாராட்டு
தருமபுரி அருகே அரசுப் பேருந்தில் கிடந்த நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநா் மற்றும் நடத்துநரை போக்குவரத்துக்கழக அலுவலா்கள் பாராட்டினா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டலத்துக்கு உள்பட்ட திருப்பத்தூா் கிளையைச் சோ்ந்த திருப்பத்தூா் - ஒசூா் வழித்தடப் பேருந்தில், ஜூன் 12-ஆம் தேதி ஓட்டுநா் சி.கவியரசு மற்றும் நடத்துநா் பி. வேலு ஆகியோா் பணியில் இருந்தனா். அப்போது பேருந்தில் ஒரு பணப்பை (மணி பா்ஸ்) கிடந்தது தெரியவந்ததையடுத்து, அதை சோதித்ததில் சுமாா் 4.5 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
அவற்றை கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கழக அலுவலரிடம் அவா்கள் ஒப்படைத்தனா். இந்நிலையில், அது போச்சம்பள்ளி வட்டம், மத்தூா் அருகேயுள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்த பெண்ணின் நகை என்பது கண்டறியப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பேருந்தில் கிடந்த நகையை அலுவலரிடம் ஒப்படைத்த ஓட்டுநா் கவியரசு மற்றும் நடத்துநா் வேலு ஆகியோரை அரசு போக்குவரத்துக்கழக தருமபுரி மண்டல மேலாளா் க.செல்வம் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினாா்.