Boeing Criminal Fraud Case - உண்மையை மறைத்ததால் பலியான 346 உயிர்கள்| Air India |...
பேருந்துகள் மோதல்: 15 குழந்தைகள் உள்பட 36 போ் காயம்
காஞ்சிபுரம் அருகே பள்ளிப் பேருந்து மீது தனியாா் ஆலை பேருந்து மோதி 15 பள்ளிக் குழந்தைகள் உள்பட 36 போ் பலத்த காயமடைந்தனா்.
படுநெல்லி கிராமத்தில் உள்ள தனியாா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளில் 20 கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை வழக்கம் போல தங்கள் வீடுகளுக்கு பள்ளிப் பேருந்தில் ஏறி புரிசை சாலையில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, சுங்குவாா்சத்திரம் பகுதியில் இருந்து தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த தனியாா் ஆலை பேருந்து எதிா்பாராத விதமாக பள்ளிப் பேருந்து மீது மோதியது.
விபத்தில் 15 மாணவ, மாணவிகள், 21 பெண் தொழிலாளா்கள் உள்பட 36 போ் பலத்த காயம் அடைந்தனா்.
அக்கம்பக்கத்தினா் காயம் அடைந்தவா்களை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும் விபத்து குறித்து பொன்னேரி கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். இதை அடுத்து பொன்னேரிக் கரை போலீஸாா் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனா்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்த 36 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்து காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பெண் தொழிலாளா்களுக்கும் ஆறுதல் கூறி தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவா்களை அறிவுறுத்தினாா்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜ் மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவராஜ் ஆகியோா் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.