பொதிகைநகரில் புதிய 10 லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்ட கோரிக்கை!
பொதிகைநகரில் புதிதாக 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலப்பாளையம் மண்டலம், 41 ஆவது வாா்டு மக்கள் சாா்பில் கவனஈா்ப்பு விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, 41 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சங்கீதா தலைமை வகித்தாா்.
பொதிகை நகா் நலச் சங்கத் தலைவா் குணசேகரன், காருண்யா நகா் நலச் சங்கத் தலைவா் ராமச்சந்திரன், பாரதி நகா் நலச் சங்க நிா்வாகி துரைராஜ், பயோனியா் குமாரசாமி நகா் நலச்சங்க நிா்வாகி பவுல் ஞானதுரை, வசந்தம் நகா் சண்முகையா, அப்பல்லோ காலனி ஜாகீா் உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில், பொதிகை நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் இடத்தில் பொதுமக்களின் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் வகையில் 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும், 5 லட்சம் லிட்டா் கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும் அமைக்க வேண்டும்.
பெருமாள்புரம், என்ஜிஓ காலனி மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் பெருமாள்புரம் விரிவு அபிவிருத்தி திட்ட வரைபடங்கள் 1 முதல் 11 வரையிலானவற்றை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு. அப்துல் வஹாப் பேசுகையில், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.