பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: அரியலூா் மாவட்ட மாணவா் மாநில அளவில் 3-ஆம் இடம்
தமிழ்நாட்டில் நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் அமலன் ஆண்டோ மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்தாா்.
அரியலூா் மாவட்டம், மைக்கேல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மைக்கேல்ராஜ் மகன் அமலன்ஆண்டோ (17). இவா், குழவடையான் கிராமத்திலுள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்த நிலையில், மே மாதம் வெளியான தோ்வு முடிவில் 598 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெளியிட்டாா். அந்த பட்டியலில் மாணவா் அமலன்ஆண்டோ, 200-க்கு 200-க்கு மதிப்பெண்களுடன் மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்துள்ளாா். இதையடுத்து அவரது குடும்பத்தினா் மாணவருக்கு இனிப்பு வழங்கி பாராட்டினா்.