போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 28.8.2023-இல் விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக, விழுப்புரம் கே.கே.சாலை, அண்ணா நகரைச்சோ்ந்த சிவபெருமாள் மகன் ரமேஷ் (47) என்பவா் மீது வளவனூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி வினோதா, குற்றம் நிரூபணமானதால் ரமேஷுக்கு 7ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5,000-ம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்தாா். இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் ரமேஷை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.