மணிப்பூரில் தோண்டத்தோண்ட கிடைக்கும் ஆயுதங்கள்! பாதுகாப்புப்படை தீவிர சோதனை
போலி தூதரக ஜெயின் தில்லு முல்லு அம்பலம்: 162 வெளிநாட்டு பயணம், ரூ.300 கோடி மோசடி, 25 போலி கம்பெனி..
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கடந்த வாரம் வெஸ்ட்ஆர்டிகா நாட்டின் பெயரில் போலி தூதரகம் நடத்தியது தொடர்பாக ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 4 கார்கள், போலி வெஸ்ட்ஆர்டிகா சீல், போலி பாஸ்போர்ட், போலி தூதரக நம்பர் பிளேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு சர்ச்சைக்குறிய சந்திராசாமி உட்பட முக்கிய தலைவர்களுடன் இருந்த புகைப்படங்களும் சிக்கி இருக்கிறது.
ஹர்ஷ்வர்தன் குறித்து உத்தரப்பிரதேச சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையில், தூதரகம் என்ற பெயரில் அலுவலகம் திறந்து வைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஆள்களை வேலைக்கு அனுப்புவதை பிரதான தொழிலாக கொண்டுள்ளார். அதோடு ஹவாலா முறையில் பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

உலகில் எந்த நாட்டாலும் அங்கீகரிக்கப்படாத வெஸ்ட்ஆர்டிகா நாட்டின் தூதகரம் என்று மிகப்பெரிய அறிவிப்பு பலகை ஹர்ஷ்வர்தன் அலுவலகத்தில் இருந்தது.
2017-ம் ஆண்டில் இருந்து இந்த போலி தூரகத்தை நடத்தி வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் தூதரக அலுவலகத்திற்கு வெளியில் அடிக்கடி அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதோடு சில சேவைகளையும் செய்து தன்னை நல்லவனாக காட்டிக்கொண்டுள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்திராசாமி மட்டுமல்லாது சவுதி ஆயுத டீலர் அட்னன் கஷோகி ஆகியோருடன் நெருக்கமாக இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்திராசாமி மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வி.பி.சிங், சந்திரசேகர் ஆகியோருக்கு ஆன்மீக குருவாக இருந்தார். 1996-ம் ஆண்டு நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சந்திராசாமி கைது செய்யப்பட்டார்.
அவரது ஆசிரமத்தில் ரெய்டு நடந்தபோதுதான் அவருக்கு சவுதி ஆயுத டீலர் அட்னன் கஷோகியுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு சந்திராசாமி நிதியுதவி செய்ததாவும் கூறப்பட்டது.
சந்திராசாமிதான் ஹர்ஷ்வர்தனை சவுதி ஆயுத டீலர் அட்னன் கஷோகி மற்றும் அஹ்சன் அலி சையத் ஆகியோருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த சையத் பணமோசடிக்காக ஹர்ஷ்வர்தனுடன் சேர்ந்து 25 போலி கம்பெனிகளை தொடங்கி இருக்கிறார்.
சையத் ஸ்விட்சர்லாந்தில் ஒரு கம்பெனியை தொடங்கினார். அந்த கம்பெனி கமிஷன் அடிப்படையில் பெரிய அளவில் கடன் வாங்கித்தருவதாக தெரிவித்தது.
அந்த வகையில் ரூ.300 கோடி அளவுக்கு கடன் கேட்டவர்களிடம் கமிஷனாக வாங்கிய சையத் ஸ்விட்சர்லாந்திற்கு தப்பிச்சென்றுவிட்டார். 2022-ம் ஆண்டு சையத் லண்டனில் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் ஹர்ஷ்வர்தனுக்கு எந்த அளவுக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரிக்க இருக்கின்றனர். ஹர்ஷ்வர்தனை தங்களது காவலில் எடுக்க போலீஸார் இன்று கோர்ட்டை அணுக இருக்கின்றனர்.
மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு இருப்பதால் ஹர்ஷ்வர்தனை வெஸ்ட்ஆர்டிகா தங்களது அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.

இது தொடர்பாக வெஸ்ட் ஆர்டிகா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2016ம் ஆண்டு ஹர்ஷ்வர்தன் வெஸ்ட்ஆர்டிகாவிற்கு நன்கொடைகளை கொடுத்ததை பார்த்து அவரை எங்களது அணியில் சேர்த்துக்கொண்டோம். ஆனால் அவர் தூதரக நம்பர் பிளேட், பாஸ்போர்ட், வெஸ்ட்ஆர்டிகா சீல் போன்றவற்றை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இது போன்ற செயல்களை செய்ய அவருக்கு அதிகாரம் கிடையாது. வெஸ்ட்ஆர்டிகாவே பாஸ்போர்ட், தூதரக நம்பர் பிளேட்களை பயன்படுத்துவதில்லை.
உலகம் முழுவதும் இருக்கும் எங்களது அணி உறுப்பினர்களும் அவற்றை பயன்படுத்த நாங்கள் ஊக்கப்படுத்துவதில்லை. ஹர்ஷ்வர்தன் ஜெயின் இவ்விவகாரத்தில் விதிகளை மீறி செயல்பட்டு இருப்பதால் அவர் எங்களது அமைப்பின் பிரதிநிதி என்பதில் இருந்து காலவரையற்று சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெஸ்ட்ஆர்டிகா நாட்டை 2001ம் ஆண்டு அமெரிக்க கடற்படை அதிகாரி டிராவிஸ் மெக்ஹென்றி என்பவர் கண்டுபிடித்தார். அதோடு அப்பகுதிக்கு தானே அதிபர் என்றும் அறிவித்துக்கொண்டார். இந்த நாட்டிற்கு கொடியும், கரன்சியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்த நாடும் அதனை அங்கீகரித்ததில்லை.