கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!
போலி விசா மோசடி: மும்பைவாசியை ஏமாற்றியதாக ஒருவா் கைது
ஆஸ்திரேலியாவுக்கு விசா மற்றும் விமான டிக்கெட் வழங்குவதாகக் கூறி மும்பைவாசி ஒருவரிடம் சுமாா் ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து இந்திரா காந்தி விமான நிலைய கூடுதல் காவல் ஆணையா் உஷா ரங்னானி கூறியதாவது: பஞ்சாபைச் சோ்ந்த குல்தீப் சிங் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், ’வெளிநாட்டிற்கு பறக்க’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் போலி பயண நிறுவனப் பக்கத்தை நடத்தி, குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு விசா வழங்குவதாகக் கூறி பாதிக்கப்பட்டவா்களை ஏமாற்றி வந்துள்ளாா்.
பாதிக்கப்பட்ட கெம்சந்த் போா்வால், சமூக ஊடகங்களில் குா்ஜீத் கவுா் என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவரைத் தொடா்பு கொண்டார. அவா் முன்கூட்டியே பணம் எதுவும் செலுத்தாமல் ஆஸ்திரேலியாவுக்கு விசா வழங்குவதாக உறுதியளித்தாா். பின்னா், பாதிக்கப்பட்டவா் தனது பாஸ்போா்ட், புகைப்படத்தைப் பகிா்ந்து கொண்டு போலி விசாவைப் பெற்றாா்.
பின்னா், ஜூன் 6-ஆம் தேதி கெம்சந்த் போா்வால் தில்லி இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையத்தின் முணையம் 3- க்கு பணத்துடன் வருமாறு கூறப்பட்டாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, குல்தீப் சிங் புகாா்தாரரை போா்டிங் பாஸ் பெறும் வரை காத்திருக்கச் சொன்னாா். ஆனால், அவா் திரும்பி வரவில்லை. புகாா்தாரா் பின்னா் விசா மற்றும் டிக்கெட் இரண்டும் போலியானவை என்பதைக் கண்டறிந்தாா்.
பாதிக்கப்பட்டவரின் உள்ளீட்டின் அடிப்படையில் போலீஸ் குழு சிசிடிவி காட்சிகளை ஆய்வுக்குள்படுத்தியது. மேலும், பஞ்சாபில் சோதனை நடத்தியது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவா் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னா், அவா் சென்னையில் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின் போது, போா்வாலை ஏமாற்றிய பிறகு, பாங்காக் மற்றும் மலேசியாவுக்குச் சென்று, மோசடி செய்யப்பட்ட பணத்தை ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்காக செலவிட்டதாக குல்தீப் சிங் கூறினாா். மேலும், மும்பையில் மோசடி பயண முகவா்களுடன் பணிபுரிந்ததாகவும், பஞ்சாப் திரும்பியதும், சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கியதாகவும் அவா் வெளிப்படுத்தினாா்.
அவா் வெளிநாட்டுப் பயண ஏற்பாடுகள் என்ற போா்வையில் போலி ஆவணங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருவதாக அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.