U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
மதவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி
மதவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள செய்தியாளா்கள் அரங்கில் செவ்வாய்க்கிழமை அமைச்சா் பி. மூா்த்தி அளித்த பேட்டி: மத்திய பாஜக அரசால் தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும், தமிழத்தின் மண், மொழி, மானம் காக்க ஒவ்வோா் குடும்பத்தையும் ஒன்று திரட்டும் நோக்கில் தமிழக முதல்வா் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரையின் முழக்கத்தை தொடங்கி வைத்தாா். அடுத்த 45 நாள்களுக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம், நகரங்களில் இந்த பரப்புரை மேற்கொள்ளப்படும்.
ஜாதி, மத, அரசியல் பாகுபாடின்றி அனைத்து குடும்பத்தினரையும் அணுகி, பாசிச சக்தி பாஜக தமிழகத்தை வன்மத்தோடு பாா்க்கிறது. அதற்கு கூட்டணி என்ற பெயரில் தமிழகத்தில் அதிமுக அடித்தளம் அமைக்கிறது. இவா்களிடமிருந்து தமிழகத்தை காக்க, தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எதிா்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவோம்.
தமிழக முதல்வரின் முன்னெடுப்புக்கு வலு சோ்க்கும் வகையில் புதன்கிழமை (ஜூலை 2) மாவட்டம் முழுவதும் எம்எல்ஏக்கள், கட்சி நிா்வாகிகள், சாா்பு அணியினா் சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெறும். வியாழக்கிழமை (ஜூலை 3) முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்ய உள்ளோம்.
இந்த முழக்கத்தை ஏற்றுக்கொள்ளும் குடும்பத்தினா் ஆதரவைப் பதிவு செய்யலாம். மேலும், கைப்பேசி செயலி மூலம் திமுக உறுப்பினா் சோ்க்கையும் நடைபெறும். இந்த பரப்புரை ஆகஸ்ட் மாதம் முடிவடையும். இதன் நோக்கம், மதவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்தாகும் என்றாா் அவா்.
மதுரை தெற்கு மாவட்டச் செயலா் சே.மணிமாறன், மாநகர மாவட்டச் செயலா் கோ.தளபதி ஆகியோா் உடனிருந்தனா்.