அகமதாபாத் விமான விபத்து இடிபாடுகளுக்கு இடையே எவ்வளவு தங்க நகைகள் மீட்கப்பட்டன?
மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும் வரை மாநில அரசு காத்திருக்க வேண்டும்: பாஜக
மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும் வரை மாநில அரசு காத்திருக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. லெஹா்சிங் சிரோயா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 200 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை கா்நாடக அரசு கைவிட்டது. தற்போது புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது ஒருபுறம் என்றால், மாநில அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு புதிய குழப்பங்களுக்கு வித்திடும். புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட பிறகு, பழையதும், புதியதுமாக இருவேறு புள்ளிவிவரங்களை மக்கள் மன்றத்தில் மாநில அரசு அறிவிக்கும்.
இந்த புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு மக்கள் விமா்சிப்பாா்கள். தங்களுக்கு சாதகமாக உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பை சமுதாயங்கள் தோ்வுசெய்யும். இது தேவையில்லாத குழப்பங்களுக்கு வழிவகுக்கும். இதனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் நோக்கம் சிதைந்துவிடும்.
அதைத் தொடா்ந்து மத்திய அரசு எடுக்கவிருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்புகளும் வெளியிடப்படும். அது 3ஆவது புள்ளிவிவரமாக இருக்கும். இது குழப்பத்தை மேலும் அதிகரிக்கும். இந்த 3 ஜாதிவாரி கணக்கெடுப்புகளும் மாறுபட்ட புள்ளிவிவரங்களை அளிக்கவிருக்கிறது. இந்த 3 புள்ளிவிவரங்களும் ஒரேமாதிரி இருக்கப்போவதில்லை என்பதை உறுதியாக கூறமுடியும்.
எனவே, இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்க, புதிதாக எடுக்கவிருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு கைவிடலாம். மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடும் வரை மாநில அரசு காத்திருக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.