தேனிலவுக்கு முன் காதலனுடன் தப்பிய புது மணப்பெண்! நல்லவேளை, உயிர் பிழைத்தேன் என ம...
சொந்த அக்காவிடம் ரூ.17 கோடி மோசடி - மலேசியாவுக்கு தப்ப முயன்ற அதிமுக கவுன்சிலர் கைது - என்ன நடந்தது?
சொந்த அக்காவிடமே ரூ.17 கோடியை மோசடி செய்துள்ளார் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் ராஜா. இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் மகன் ஆவார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் 59-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராஜா. இவரது மனைவி அனுஷா. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ராஜாவின் அக்கா பொன்னரசியிடம் தனது நிறுவனமான ஒம்மீனா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்டில் முதலீடு செய்யுமாறும், அப்படி செய்தால், அந்த நிறுவனத்தின் 16 சதவிகித பங்கை பொன்னரசிக்கு தருவதாகவும் கூறியுள்ளனர்.

இதை நம்பி, பொன்னரசி தனது கணவர் அசோக் குமாருக்கு நந்தம்பாக்கத்தில் இருக்கும் 2 ஏக்கர் சொத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து, வங்கியில் ரூ.11 கோடி கடன் வாங்கி கொடுத்திருக்கிறார். பொன்னரசி முதலீடு செய்த ரூ.11 கோடியை ராஜா அவருக்கு தெரியாமல் அஷுன் எக்ஸிம் என்ற வேறொரு நிறுவனத்திற்கு மாற்றி உள்ளார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கல்குவாரி தொடங்க உள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் கூடுதல் பங்கு தருவதாகவும் ராஜா கூறியுள்ளார். இதற்கும் பொன்னரசி தனது 300 சவரன் நகையை அடமானம் வைத்து ராஜாவிடம் பணம் கொடுத்திருக்கிறார். இந்த பணத்தில் ராஜா அவரது பெயரில் சுமார் 40 ஏக்கர் நிலத்தை வாங்கியிருக்கிறார்.
போலி கையெழுத்து
பின்னர், பொன்னரசிக்கு இந்தத் தொழிலில் பங்கு கொடுக்கக்கூடாது என்று அவரைப் போல போலி கையெழுத்து போட்டு, அவரது பங்குகளை தனது பெயருக்கு மாற்றியிருக்கிறார். கூடவே, போலி கையெழுத்து போட்டு பொன்னரசியின் ராஜினாமா கடிதத்தையும் தயார் செய்துள்ளார்.
இந்த இரு சம்பவத்தின் மூலமும் ராஜா தனது அக்கா பொன்னரசியிடம் இருந்து கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய் ஏமாற்றி மோசடி செய்துள்ளார் என பொன்னரசி சென்னை மத்திய குற்றப் பிரிவின் ராஜா மீது புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, ராஜா வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிடக் கூடாது என்று அவருக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும், ராஜா சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு தப்பி செல்ல முயன்றிருக்கிறார். அதனால், அவரை அங்கேயே கைது செய்திருக்கிறது காவல் துறை.
பின்னர், மத்திய குற்றப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு வழக்குகள் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.