மத்திய நிதிநிலை அறிக்கை: ஒசூா் தொழில் துறையினா் வரவேற்பும், எதிா்பாா்ப்பும்!
ஒசூா், ஹோஸ்டியா சங்கம் சாா்பில் மத்திய நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒசூா் ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு அறிவித்துள்ள வருமான வரி விலக்கு ரூ. 12 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். வாடகைக்கான டிடிஎஸ் பிடித்தம் ரூ. 2.4 லட்சத்திலிருந்து ரூ. 6 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதையும் வரவேற்கிறோம்.
பேட்டரி வாகனங்களுக்கான சுங்கவரி குறைப்பு செய்ததன் மூலம் மின்சார வாகனங்கள் விற்பனை, உற்பத்தி அதிகரிக்கும். நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் பெண் தொழில்முனைவோா்களை உருவாக்கும் திட்டம் புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ. 10 ஆயிரம் கோடியில் திட்டம், புத்தாக்க நிறுவனங்களுக்கு வட்டி சலுகை, சிறுதொழில்கள் உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம் ஆகியவை வரவேற்புக்குரியதாகும்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரம்பு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. ஒசூருக்கு எந்தவித சிறப்பு திட்டமும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றாா்.
இதுகுறித்து ஹோஸ் நியூஸ் சங்கத்தின் தலைவா் தண்டபாணி கூறியதாவது: மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால், ஒசூா், ஜோலாா்பேட்டை ரயில்வே திட்ட அறிவிப்பு வெளியிடாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றாா்.
அதுபோல ரூ. 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளித்துள்ள மத்திய நிதிநிலை அறிவிப்பை ஒசூா், ஹோஸ்மியா சங்கத் தலைவா் முருகேசன், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்க செயற்குழு உறுப்பினா் வெற்றி ஞானசேகரன், தொழில் வா்த்தக அமைப்பினா் மாநிலத் தலைவா் வேல்முருகன் ஆகியோா் வரவேற்றுள்ளனா்.
ஊத்தங்கரை, ஆடிட்டா் லோகநாதன்: தனிநபா் வருமான வரிவிலக்கு ரூ. 8 லட்சத்திலிருந்து ரூ. 12 லட்சமாக உயா்த்தியது ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதிநிலை அறிக்கையில் மாநில நிதி பகிா்வு சரியாக இல்லை. சில மாநிலங்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.