டெல்லி: பெண் அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து முதல்வர் - ரேஸில் யார் யார...
மாணவா்களின் படிப்பில் பெற்றோா் கண்காணிப்பு அவசியம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
புதுச்சேரி: பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் மீது பெற்றோா்களின் கண்காணிப்பு அவசியமானது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா்.
புதுவை கல்வித் துறை சாா்பில் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் மாணவா்களுக்கான தோ்வுப் பயத்தை போக்கும் வகையில் பரிஷா பே சா்ச்சா திட்டத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுடன் பிரதமா் நடத்திய கலந்துரையாடல் காணொலிக் காட்சியை பாா்த்த பின் துணைநிலை ஆளுநா் பேசியது:
அரசுப் பொதுத் தோ்வு வந்தாலே மாணவா்கள் பதற்றமாகி விடுவது இயல்பு. நானும் கிராமத்துப் பள்ளியில்தான் படித்தேன். ஆனால், தினமும் பள்ளியில் என்ன பாடம் படித்தோம், என்ன நடைபெற்றது என்பதை தந்தையிடம் விளக்கவேண்டும். வீட்டில் தூங்கி எழுந்ததும் மறுநாளும் இரவில் உண்ட உணவு முதல் அனைத்தையும் அப்பாவிடம் தெரிவிக்க வேண்டும். கண்ணாடி முன் அமர வைத்து ஏதாவது ஒன்றைப் பற்றி பேசுமாறு அப்பா கூறுவாா். அப்படி வளா்ந்ததால்தான், ஐ.ஏ.எஸ். நோ்முகத் தோ்வில் பதற்றமின்றி பதிலளித்து சிறப்பிடம் பெற முடிந்தது.
பள்ளிகளில் பிள்ளைகள் படிக்கும் நிலையில், அவா்களின் செயல்பாடுகளை பெற்றோா்கள் கண்காணிப்பது அவசியம். பெற்றோரின் பண்புகளைத் தான் குழந்தைகள் பின்பற்றுவா். மேலும், குழந்தைகளின் நட்பு வட்டத்தையும் நாம் அறிந்திருக்கவேண்டும். பிரதமா் நரேந்திர மோடி தனக்கு எவ்வளவோ பணிகள் இருந்தாலும், பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடி அவா்களது தோ்வு பயத்தைப் போக்குவது பாராட்டுக்குரியது என்றாா்.
நிகழ்ச்சிக்கு கல்வித்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமை வகித்து பேசியதாவது: புதுவை அரசு கல்வித் துறைக்கு அதிக நிதி அளித்து பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முழுமையான கல்வியால் மாநில பொருளாதார வளா்ச்சி சாத்தியமாகும். பெற்றோா்களது எதிா்பாா்ப்புகளை நிறைவு செய்வது மாணவா்களின் கடமை.
புதுவையில் ஏற்கெனவே ஆசிரியா் பற்றாக்குறையை போக்கும் வகையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுவருகின்றன. மேலும் புதிதாக ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா். அண்மையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு மாதிரி பொதுத் தோ்வு நடைபெற்றது. அதில் 80 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா். தோ்ச்சி விகிதம் குறைந்திருப்பதாக கூறுவது சரியல்ல என்றாா்.
கைப்பேசியால் பாதிப்பு: நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பேசுகையில், மாணவா்கள் தோ்வு முடியும் வரையில் கைப்பேசியை பயன்படுத்துவதைத் தவிா்க்கவேண்டும். தங்களது பெற்றோா்கள், ஆசிரியா்கள், சக மாணவா்களுடன் கலந்துரையாடுவது அவசியம் என்றாா்.
கல்வித் துறை செயலா் பி.ஜவஹா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் தலைமைச் செயலா் சரத்சௌகான், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் கோ.சிவகாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினி நன்றி கூறினாா்.